பள்ளிகளில் மாணவிகளுக்கான மாதவிடாய் சுகாதார மேலாண்மையை உறுதி செய்யும் வகையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தனது அங்கீகாரம் பெற்ற அனைத்துப் பள்ளிகளுக்கும் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. மாதவிடாய் சுகாதாரத்தை ஓர் அடிப்படை அரசியலமைப்பு உரிமையாக உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, இந்த மிக முக்கிய உத்தரவை சிபிஎஸ்இ கல்வி வாரியம் பிறப்பித்துள்ளது.
சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, மாணவிகளுக்குப் பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான கற்றல் சூழலை உருவாக்குவது அனைத்துப் பள்ளிகளின் கட்டாயக் கடமையாகும். மாதவிடாய் காலங்களில் மாணவிகள் எதிர்கொள்ளும் உடல் மற்றும் மனரீதியான சிரமங்களைக் குறைக்கவும், அவர்கள் எவ்வித தடையுமின்றி கல்வியைத் தொடரவும் இந்தப் புதிய விதிமுறைகள் வழிவகை செய்கின்றன.
புதிய வழிகாட்டுதல்களின் முக்கிய அம்சங்கள்
சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்ற அனைத்துப் பள்ளிகளிலும் உள்ள கழிப்பறைகளில், போதுமான தண்ணீர் வசதியுடன் கூடிய தூய்மை எப்போதும் பராமரிக்கப்பட வேண்டும். மாணவிகளுக்குத் தேவைப்படும் நேரத்தில் உடனடியாகப் பயன்படுத்தும் வகையில், தரமான சானிட்டரி நாப்கின்கள் பள்ளிகளில் எளிதாகக் கிடைக்கும்படி ஏற்பாடு செய்ய வேண்டும்.
பயன்படுத்தப்பட்ட நாப்கின்களைப் பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான முறையில் அப்புறப்படுத்த, கழிப்பறைகளில் எரியூட்டிகள் அல்லது முறையான மூடியுடன் கூடிய குப்பைத் தொட்டிகள் கட்டாயம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இவற்றைக் கண்காணிக்கவும் பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் ஏற்படுத்தவும், இது தொடர்பான சமூகத் தயக்கங்கள் மற்றும் மூடநம்பிக்கைகளைப் போக்கவும் பள்ளிகள் சிறப்பு விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை வகுப்புகளைத் தொடர்ந்து நடத்த வேண்டும் எனவும் சிபிஎஸ்இ வலியுறுத்தியுள்ளது.
அனைவரும் பின்பற்றுவதை உறுதி செய்க
உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை முழுமையாக நடைமுறைப்படுத்தும் விதமாக எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையானது, மாணவிகளின் கண்ணியம், உடல்நலம் மற்றும் நல்வாழ்வைப் பேணிக் காப்பதோடு, அவர்களின் பள்ளி இடைநிற்றலைத் தடுத்து வருகைப் பதிவை அதிகரிக்கவும் பெரிதும் உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழிகாட்டுதல்களை அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளும் உடனடியாகப் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.