சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில், கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் ''தமிழ்நாடு தலை குனியாது'' என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுகவில் முன்னாள் முதலமைச்சராக இருந்தவர், தற்போது பரம எதிரி கட்சியான திமுகவிற்கு தாவிய ஓ. பன்னீர்செல்வம் கலந்துக்கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் கேள்விகளுக்கு பதிலளிகையில் கூறியதாவது:
டெல்லி என்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுவார் என்ற டிடிவி தினகரன் கூறியது குறித்து அவருடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ''டெல்லி சென்றாலே தமிழக முதல்வர் பயப்படுவார் என்று கூறுவது முற்றிலும் தவறு. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு யாராலும் அழுத்தம் கொடுக்க முடியாது. அமெரிக்காவே மிரட்டினாலும் அவர் பணிய மாட்டார். தமிழ்நாடு என்றைக்கும் தலை குனியாது,'' என்று ஓ.பி.எஸ் பதிலளித்துள்ளார்.
அத்துடன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அரசு அதிகாரிகள் திமுக கட்டுப்பாட்டில் செயல்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டை ஓ.பன்னீர்செல்வம் மறுத்துள்ளதோடு, ''தமிழக அரசு மக்கள் நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துகிறது என்பதை மக்கள் நன்றாக அறிந்துள்ளனர்'' என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ''பண்ணையார் ஆட்சி'' என்று திமுக அரசை தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா விமர்சித்து இருந்தார். இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த ஓபிஎஸ், ''ஆதவ் அர்ஜுனா என்ன தொழில் செய்கிறார் என்பது தமிழ்நாட்டுக்கே தெரியும். யார் பண்ணையார் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும்,'' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், தமிழக வாழ்வுரிமை கட்சியைச் சேர்ந்தவர்கள் கட்சியை விட்டு வெளியேறியதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்காமல் மௌனமாக அங்கிருந்து ஓ.பன்னீர்செல்வம் சென்றமை குறிப்பிடத்தக்கது.