Pakistan: உலகின் நம்பர் 1 தீவிரவாத நாடு பாகிஸ்தான்..அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம் ரிலீஸ் - மனுஷங்களா நீங்களா?
சுகுமாறன் March 23, 2026 10:15 AM

உலகம் முழுவதும் ஒவ்வொரு நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக இருப்பது தீவிரவாதம். பல்வேறு காரணங்களை வலியுறுத்தி ஆயுதம் ஏந்திய இந்த தீவிரவாதிகளால் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு வருகிறார். ஆசியாவில் தீவிரவாதம் அதிகம் இருக்கும் நாடாக பாகிஸ்தானை இந்தியா மற்றும் மற்ற நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

தீவிரவாத நாடுகள் பட்டியலில் நம்பர் 1:

இந்த நிலையில், உலகளாவில் தீவிரவாதம் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலை குளோபல் டெரரிசம் இண்டெக்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், உலகத்திலே தீவிரவாத செயல்பாடுகளில் முதலிடத்தில் இருக்கும் நாடு என்ற மோசமான இடத்தை பாகிஸ்தான் பிடித்துள்ளது.

ரத்தவெறி பிடித்த தீவிரவாதிகள்:

2025ம் ஆண்டு உலகத்திலே அதிகளவு தீவிரவாத தாக்குதல் நடந்த நாடு என்ற புள்ளிவிவரமே இதற்கு காரணம் ஆகும். கடந்தாண்டு மட்டும் அந்த நாட்டில் 1045 தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில் 1139 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 1595 பேர் காயம் அடைந்துள்ளனர். 655 பேர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 6 ஆண்டுகளாக பாகிஸ்தானில் தீவிரவாத நடவடிக்கையால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. தெற்காசியாவிலே மிக மோசமான அளவில் தீவிரவாதம் தழைத்தோங்கும் நாடாக பாகிஸ்தான் உள்ளது. குறிப்பாக, பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மற்றும் பலூசிஸ்தான் மாகாணங்களில் அதிகளவு தீவிரவாத தாக்குதல் அரங்கேறியுள்ளது. இங்கு 74 சதவீத தாக்குதல் நடந்துள்ளது. இதனால், 67 சதவீத மக்கள் உயிரிழந்துள்ளனர்.

தெரிக் இ தாலிபன்:

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதலை பெரும்பாலும் முன்னெடுத்து நடத்தும் அமைப்பாக தெரிக் இ தாலிபன் உள்ளது. கடந்தாண்டு மட்டும் இவர்கள் 595 தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 637 மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதாவது, கடந்தாண்டு பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதலால் உயிரிழந்தவர்களில் 56 சதவீதத்தினரை கொன்ற கொடூரமான அமைப்பாக தெரிக் இ தாலிபன் உள்ளது.

குறிவைத்துக் கொல்லப்படுபவர்களின் எண்ணிக்கை 450 சதவீதம் அதிகரித்துள்ளது. காவல்துறையினர் மரணம் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த அமைப்பைச் சேர்ந்த 6 ஆயிரம் முதல் 6 ஆயிரத்து 500 வரையிலான தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தான் உள்ளேயும் ஊடுருவி தீவிரவாத தாக்குதலை அரங்கேற்றி வருவதாகவும் புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது.

நட்புறவில் ஆப்கானிஸ்தான்:

ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்து 10 முதல் 50 கிலோமீட்டர் சுற்றளவில் அதிகளவு தாக்குதலை நடத்தி வருகின்றனர். பாகிஸ்தானில் உள்ள தூரந்த் கோட்டிற்கு அப்பால் தீவிரவாதிகள் நடமாட்டம் மிகவும் சுதந்திரமாக இருப்பதாகவும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சி மீண்டும் நடக்கத் தொடங்கிய பிறகு அவர்கள் தீவிரவாத அமைப்பான தெரிக் இ தாலிபன் அமைப்பினருடன் மிகவும் நட்புறவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தீவிரவாதிகளை கட்டுப்படுத்துமாறு ஆப்கானிஸ்தானின் தாலிபன் அரசிடம் பாகிஸ்தான் வலியுறுத்தியும், ஆப்கான் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது.

ரயில் கடத்தல்:

இவர்கள் மட்டுமின்றி தனி நாடு கோரி போராட்டம் நடத்தி வரும் பலூசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் நடத்தும் தாக்குதலினாலும் பல்வேறு உயிரிழப்புகள் அரங்கேறி வருகிறது. கடந்தாண்டு பயணிகள் ரயிலை சிறைபிடித்த அவர்கள் 442 பயணிகளை பிணைக்கைதிகளாக பிடித்தனர். கடந்தாண்டு நடந்த மிகப்பெரிய தீவிரவாத தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.

பகல்ஹாம் தாக்குதல்:

இந்த தீவிரவாத தாக்குதல் காரணமாக பாகிஸ்தான் இந்த தீவிரவாத செயல்பாடுகளின் பட்டியலில் 8.574 புள்ளிகள் பெற்றுள்ளது. இது அந்த நாட்டு மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்தாண்டு பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பினர் காஷ்மீரின் பகல்ஹாம் மீது நடத்திய தாக்குதலினால் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு பதிலடி தரும் வகையில் இந்தியா ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது. 

பாகிஸ்தானில் தீவிரவாத செயல்பாடுகள் அதிகரித்து வருவது என்பது அந்த நாட்டிற்கு மட்டுமின்றி இந்தியா உள்பட அண்டை நாடுகளுக்கும், ஆசியாவிற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆகும். ஏனென்றால், ஆசியாவில் நடக்கும் பல தீவிரவாத சம்பவங்களுக்கு மூளையாக பாகிஸ்தானில் இருக்கும் தீவிரவாத அமைப்புகளே உள்ளது. இதனால், பாகிஸ்தானில் அரங்கேறும் தீவிரவாத செயல்பாடுகளை ஒடுக்க வேண்டியது அந்த நாட்டு அரசாங்கத்தின் கடமை மட்டுமின்றி மற்ற நாடுகளின் கடமையும் ஆகும்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.