தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் கோவையில் எந்தத் தொகுதியில் போட்டியிடலாம் என்பது குறித்துத் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே சிங்காநல்லூர் தொகுதி பாஜக நிர்வாகிகளுடன் அவர் விரிவான ஆலோசனைகளை நடத்திய நிலையில், தற்போது அவரது கவனம் கவுண்டம்பாளையம் தொகுதியின் பக்கம் திரும்பியுள்ளது.
தனது இல்லம் அமைந்துள்ள தொகுதி என்பதால், கவுண்டம்பாளையத்தில் போட்டியிடுவது குறித்து அந்தப் பகுதி முக்கிய நிர்வாகிகளுடன் அவர் ரகசிய விவாதங்களை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றத் தேர்தலில் கோவையில் அண்ணாமலை பெற்ற கணிசமான வாக்குகள், அவரை மீண்டும் கோவையிலேயே களம் இறங்கத் தூண்டியுள்ளது.
“சிங்காநல்லூரா அல்லது கவுண்டம்பாளையமா?” என்ற குழப்பம் நீடித்து வரும் நிலையில், கவுண்டம்பாளையம் தொகுதியில் உள்ள சாதக பாதகங்களை அவர் அலசி வருகிறார். அண்ணாமலையின் இந்தத் திடீர் ஆலோசனைக் கூட்டங்கள் கோயம்புத்தூர் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், அவரது இறுதி முடிவுக்காகத் தொண்டர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.