ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட டிமோனா மற்றும் அரத் நகரங்களுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். கடந்த 48 மணி நேரத்தில் ஈரான் செய்துள்ள காரியங்கள், அந்த நாடு உலகிற்கே ஒரு பெரும் அச்சுறுத்தல் என்பதை நிரூபித்துள்ளதாக அவர் சாடினார்.
குழந்தைகள் காப்பகம் மற்றும் முதியோர் இல்லங்களைக் குறிவைத்து ஈரான் ஏவுகணைகளை வீசியுள்ளதாகவும், தடை செய்யப்பட்ட கிளஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்தி சர்வதேச சட்டங்களை ஈரான் மீறி வருவதாகவும் அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தங்களுக்காக மட்டும் போராடவில்லை, ஒட்டுமொத்த உலகிற்காகவும் போராடுவதாகக் குறிப்பிட்ட அவர், மற்ற நாடுகள் இன்னும் ஏன் மௌனமாக உள்ளன எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், எருசலேம் அருகே உள்ள அல்-அக்ஸா மசூதி, புனித தேவாலயங்கள் போன்ற முக்கிய மதத் தலங்களுக்கு மிக அருகிலேயே ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைகள் விழுந்துள்ளதாகவும், ஈரானுக்கு எந்த மதத்தின் மீதும் அக்கறை இல்லை என்றும் நெதன்யாகு தெரிவித்தார்.
டிமோனாவில் உள்ள இஸ்ரேலின் ரகசிய அணுசக்தி மையத்திற்கு மிக அருகிலேயே இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளதால், இஸ்ரேலிய விமானப்படை தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை மூடி உலக நாடுகளை ஈரான் ‘ஆயில் பிளாக்மெயில்’ செய்து வருவதாகவும், ஈரானின் ஏவுகணைகள் இப்போது ஐரோப்பாவையும் தாக்கும் வல்லமை பெற்றுள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.