என் சம்பளத்துல பிடிச்சி அவருக்கு கொடுங்க!.. காமெடி நடிகருக்காக சூர்யா செய்த சம்பவம்!..
CineReporters Tamil March 23, 2026 02:48 PM

கோலிவுட்டில் கதாசிரியர், வசனகர்த்தா, இயக்குனர், நடிகர் என பல அவதாரங்களை எடுத்தவர் சிங்கம் புலி. சொந்த ஊர் மதுரை. பாரதிராஜா, இளையராஜா ஆகியோரை பார்த்து சினிமாவுக்கு வந்தவர் இவர்.
நிறைய திரைப்படங்களில் உதவி இயக்குனராக வேலை செய்திருக்கிறார். குறிப்பாக இயக்குனர்கள் சுந்தர் சி, பாலா ஆகியோரின் நிறைய படங்களில் பணிபுரிந்திருக்கிறார்.

கண்ணன் வருவான், ரேணிகுண்டா உள்ளிட்ட சில படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார். அஜித்தை வைத்து ரெட், சூர்யாவை வைத்து மாயாவி ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய சிங்கம்புலி சூர்யாவை பற்றி ஒரு தகவலை பகிர்ந்து கொண்டார்..

ஒருநாள் சூர்யா சார் என்னை அழைத்து ‘நான் ஏவிஎம் நிறுவனத்திற்கு ஒரு படம் செய்யப்போகிறேன்.. மலையாளத்தில் வெளிவந்த குஞ்சு குன்னன் படத்தின் தமிழ் ரீமேக் இது. இந்த படத்துக்கு நீங்கள் வசனம் எழுதினால் நான் நடிக்கிறேன்’ என்று சொன்னார். உடனே ஏவிஎம் நிறுவனத்திற்கு போனேன்.. ஒரு சேரை கட்டி ‘உட்காருங்கள்.. முரட்டுக்காளை படம் பற்றி பேச வரும்போது ரஜினி சார் இங்கேதான் அமர்ந்திருந்தார்’ என சொன்னார்கள். எனக்கு பெருமையாக இருந்தது..

‘உங்களுக்கு என்ன சம்பளம்?’ என்று கேட்டார்கள்.. நான் யோசித்து சொல்கிறேன் என்றேன்.. ‘இல்லை இல்லை.. இப்போது அதை முடித்து விடுவோம்.. வேலையை துவங்க வேண்டும்.. சொல்லுங்கள்’ என்றார்கள்.. அவர்கள் என்ன சம்பளம் கொடுப்பார்களோ அதற்கு மேல் மூணு லட்சம் வைத்து சொன்னேன்.. உடனே ‘அதை கொடுத்து விடுங்கள்’ என்றார்கள்..

எனக்கு ஆச்சரியமாக இருந்தது.. அதன் பிறகு அங்கு பணி புரியும் ஒருவரிடம் ‘நான் அதிக சம்பளம் கேட்டேன். உடனே ஒத்துக்கொண்டார்களே எப்படி?’ என்று கேட்டேன். அதற்கு அவர் ‘
சூர்யா சார் ஏற்கனவே ‘நீங்கள் என்ன சம்பளம் கொடுப்பீர்களோ அதை கொடுங்கள்.. அதற்கு மேல் அவர் கேட்கும் தொகையை என் சம்பளத்திலிருந்து பிடித்துக் கொள்ளுங்கள்’ என சொல்லிட்டார்’ என சொன்னார்.

நான் சூர்யாவிடம் ‘நீங்கள் ஏன் எனக்கு சம்பளம் கொடுக்கிறீர்கள்?’ என்று கேட்டேன். ‘நான்தானே கொடுக்க வேண்டும்.. அதனால் என்ன’ என்றார்.. அப்படிப்பட்ட ஒரு மனிதர்தான் சூர்யா’ என சிங்கம் புலி சொல்லியிருக்கிறார். சிங்கம் புலி சொன்ன அந்த திரைப்படம் பேரழகன். ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் சூர்யா, ஜோதிகா நடித்த இந்த படத்தில் சிங்கம் புலி வசனம் எழுதியிருந்தார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.