பெங்களூரை சேர்ந்த சிலர் தங்களிடம் கோர்ட்டில் டி பிரிவில் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடி செய்து விட்டதாக குற்றப்பிரிவு போலீஸில் புகார் செய்து இருந்தனர். இது போன்ற புகார்கள் பெங்களுரு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் பதிவாகி இருந்தது. அதனை தொடர்ந்து குற்றப்பிரிவு போலீஸார் இது குறித்து விசாரிக்க ஆரம்பித்தனர். விசாரணையில் ஜெசோன் டிசோசா மற்றும் அவரது மனைவி லவினா ஆகியோர் சேர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. அவர்களின் நடமாட்டத்தை கண்காணித்து இரண்டு பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணை குறித்து போலீஸார் கூறுகையில்,'' வேலையில்லாத மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் சற்று வசதியான நபர்கள் தான் இந்த தம்பதியின் இலக்கு. இவர்கள் பல்வேறு கோர்ட்களில் டி பிரிவில் வேலை வாங்கித்தருவதாக கூறி ஒவ்வொருவரிடமிருந்தும் தலா 10 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை வசூலித்துள்ளனர். இது போன்று வேலை இல்லாதவர்களை கண்டுபிடிப்பதற்காக ஏஜென்டுகளை நியமித்து இருந்தனர்.
ஏஜெண்ட்களிடம் கமிஷனை எடுத்துக்கொண்டு எஞ்சிய தொகையை கொடுக்கும்படி கூறியுள்ளனர். பணம் கொடுத்தவர்களை ஹோட்டல்களுக்கு வரவழைத்து ஆவணங்களை சரிபார்த்துள்ளனர்.
அதோடு அவர்களை நம்ப வைப்பதற்காக போலி நீதிபதியின் கையெழுத்து போடப்பட்ட பணி உத்தரவு கடிதத்தையும் கொடுத்துள்ளனர். பணம் கொடுத்தவர்கள் தாங்கள் எப்போது வேலையில் சேர வேண்டும் என்ற விபரத்தை கேட்கும்போது தம்பதி இழுத்தடித்து வந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோரிடம் ரூ.25 கோடி அளவுக்கு வசூலித்துள்ளனர். இதே போன்ற மோசடியில் 2024ம் ஆண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் ஜாமீனில் வெளியில் வந்த பிறகு மீண்டும் அதே மோசடியில் ஈடுபட்டுள்ளனர்''என்று தெரிவித்துள்ளனர்.