“தங்க நகைகள் முதல் பாத்திரங்கள் வரை”… ஈரான் மக்களின் கண்ணீரைத் துடைக்க பணத்தை அள்ளி கொடுத்த காஷ்மீர் மக்கள்… இந்தியாவிற்கு உருக்கமான நன்றி… வீடியோ வைரல்..!!!
SeithiSolai Tamil March 23, 2026 04:48 PM

ஈரான் மற்றும் இஸ்ரேல் – அமெரிக்கா இடையே நிலவி வரும் போர் சூழலால் பாதிக்கப்பட்டுள்ள ஈரான் மக்களுக்கு உதவும் வகையில், ஜம்மு காஷ்மீர் மக்கள் தங்களின் தங்கம், பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை வாரி வழங்கி வருகின்றனர். காஷ்மீர் மக்களின் இந்த மனிதாபிமான செயலுக்கு இந்தியாவிற்கான ஈரான் தூதரகம் தனது நெகிழ்ச்சியான நன்றிகளைத் தெரிவித்துள்ளது.

ஈரான் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, அங்குள்ள மக்களுக்கு உதவ காஷ்மீர் இளைஞர்கள் தன்னார்வத்துடன் களமிறங்கினர். குறிப்பாக பட்நாம் மற்றும் பாரமுல்லா மாவட்டங்களில் உள்ள ஷியா பிரிவு மக்கள் வசிக்கும் பகுதிகளில், இளைஞர்கள் வீடு வீடாகச் சென்று நிதி திரட்டினர். ஈகைத் திருநாள் (ஈத்) கொண்டாட்டங்களுக்கு அடுத்த நாள் முதல் இந்த நிதித் திரட்டும் பணி தொடங்கியது.

இந்த நிதியுதவிப் பணியில் பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். பல பெண்கள் தங்களது தங்க நகைகள், பாரம்பரிய செப்புப் பாத்திரங்கள் மற்றும் சேமிப்புப் பணத்தை வழங்கினர். ஒரு நெகிழ்ச்சியான சம்பவமாக, காஷ்மீரைச் சேர்ந்த ஒரு பெண்மணி, 28 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த தனது கணவர் தனக்கு வழங்கிய தங்க நினைவுப் பரிசையும் ஈரான் நாட்டு மக்களின் துயர் துடைக்க வழங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காஷ்மீர் மக்களின் இந்த உதவியைக் கண்டு நெகிழ்ந்துள்ள இந்தியாவிற்கான ஈரான் தூதரகம், தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில் கூறியிருப்பதாவது, “ஈரான் மக்களோடு துணை நிற்கும் காஷ்மீர் மக்களின் அன்பிற்கும், மனிதாபிமானத்திற்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள். உங்களது இந்த பேருதவியை நாங்கள் என்றும் மறக்க மாட்டோம். நன்றி இந்தியா என்று பதிவிட்டுள்ளது.

முன்னதாக, மார்ச் 17-ஆம் தேதி ஈரான் தூதரகம் தனது அதிகாரப்பூர்வ வங்கி கணக்கு விவரங்களை வெளியிட்டிருந்தது. நிதி வழங்க விரும்புவோர் அதிகாரப்பூர்வ வங்கி கணக்கிற்கு மட்டுமே அனுப்ப வேண்டும் என்றும், இதற்காகப் பகிரப்படும் அங்கீகரிக்கப்படாத QR கோடுகள் அல்லது UPI விவரங்களைப் பயன்படுத்தி ஏமாற வேண்டாம் என்றும் தூதரகம் பயணிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் திரட்டப்பட்ட இந்த நிதியுதவிகள் அனைத்தும் அங்கீகரிக்கப்பட்ட முகமைகள் மற்றும் தூதரகம் வழியாக ஈரானில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.