தமிழகத்தையே உலுக்கிய சாத்தன்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு.. இன்று காலை தீர்ப்பு!!
TV9 Tamil News March 23, 2026 11:50 AM

மதுரை, மார்ச் 23: தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் பெனிக்ஸ். இருவரும் சாத்தான்குளம் பஜார் பகுதியில், செல்போன் கடை நடத்தி வந்தனர். கடந்த அதிமுக ஆட்சிக் காலமான 2020ல் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தது. அப்போது, ஊரடங்கு விதிமுறைகளை மீறி அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மேல் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி, ஜெயராஜ், அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோரை காவல் நிலையத்திற்கு போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

இதையும் படிக்க: கட்டு கட்டாக பணம்.. அதிவேகமாக காரை ஓட்டிச் சென்ற ஐடி பெண் தலை துண்டாகி பலி.. அதிர்ச்சி சம்பவம்!

அடுத்தடுத்து தந்தை, மகன் மர்ம மரணம்:

தொடர்ந்து, விசாரணையின் முடிவில் இருவரின் மீதும் 312/2020 என்ற வழக்கை 188, 269, 294(b), 353, 506(ii) IPC ஆகிய 5 பிரிவுகளின்கீழ் பதிவு செய்தனர். மறுநாள் இருவரையும் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். சிறையில் அடைக்கப்பட்டிருந்த தந்தை, மகன் இருவர் மீதும் போலீசார் நடத்திய கொடூர தாக்குதலில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இருந்தபோதிலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமல் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததால், ஜுன் 23 -ம் தேதி (23.06. 2020) 5 மணி நேர இடைவெளியில் இருவரும் மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியது.

5 ஆண்டுகளாக நடந்துவந்த வழக்கு:

இதனையடுத்து, தந்தை – மகன் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரப்பட்ட வழக்கில் அப்போதைய சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்ஐக்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் என 10 பேரை கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இவ்வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரிகள், முதற்கட்டமாக 2027 பக்க குற்றப்பத்திரிகையும், இரண்டாம் கட்டமாக கூடுதலாக 400 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர். மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் 5 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கு நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: ஒரே சிதையில் 2 உடல்கள்? அதிர்ச்சியில் உறைந்த கிராம மக்கள் – என்ன நடந்தது?

இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு:

இதனிடையே, இந்த வழக்கில் கைதான சிறப்பு எஸ்ஐ பால்துரை, உடல்நலக்குறைவால் காலமானார். சம்பவம் நடந்த சமயத்தில் காவல் நிலையத்தில் பணியில் இருந்த பெண் போலீசார் ரேவதி, பியூலா மற்றும் எஸ்ஐ ரவிச்சந்திரன் ஆகியோர் அளித்த சாட்சியங்கள், மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதரிடம் நீதிபதி நேரடியாக கேள்விகளை எழுப்பி விசாரணை நடத்தினார். இதனைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட பிற நபர்களிடம் விசாரணை நடைபெற்று முடிவடைந்தது. இந்நிலையில், தமிழகத்தையே உலுக்கிய பரபரப்பான இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்ததால், இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.