2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழக (திமுக) வேட்பாளராக போட்டியிட்ட சா.மு. நாசர் 1,50,286 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்ததாக அதிமுக வேட்பாளர் பாண்டியராஜன் 95,012 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பெற்றார். மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் கட்சியும், நான்காவது இடத்தில் மக்கள் நீதி மையமும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. ஆவடி தொகுதியை எடுத்துக்கொண்டால், ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், மிட்டநமல்லி, மொரையம் உள்ளிட்ட பகுதிகள் இதில் அடங்குகின்றன.
இந்த தொகுதியில் பாதுகாப்புத் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. ராணுவ தளபாட உற்பத்தி மையங்கள் உள்ளதால், இந்த பகுதி முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதேபோல், ரயில்வே மற்றும் அரசு பணியாளர்கள் அதிகமாக வசிக்கும் பகுதியாகவும் இது உள்ளது. வாக்காளர் எண்ணிக்கையை எடுத்துக்கொண்டால், கிட்டத்தட்ட 3 லட்சம் வாக்காளர்கள் இந்த தொகுதியில் உள்ளனர்.
ஆவடி தொகுதியில் பொதுவாக மக்கள் முன்வைக்கும் பிரச்சினைகள், குடிநீர் விநியோகம், சாலை வசதி மற்றும் போக்குவரத்து நெரிசல், வடிகால் வசதி குறைவு. இவை முக்கியமாகக் கூறப்படுகின்றன. ஆனால், இதன் மறுபக்கமாக, சாலை மேம்பாடு, அரசு மருத்துவமனை மற்றும் பள்ளி மேம்பாடு, வீட்டு வசதி திட்டங்கள், தொழில்துறை மற்றும் பாதுகாப்புத் துறை வளர்ச்சி போன்ற பல்வேறு பணிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
2026 சட்டமன்றத் தேர்தலைப் பொருத்தவரை, இந்த தொகுதியில் திமுக மற்றும் அதிமுக இடையே கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெற்றி வாய்ப்பு இரு கட்சிகளுக்கும் சமமாக உள்ளது என அரசியல் வட்டாரங்களில் கருதப்படுகிறது.
அதே நேரத்தில், களத்தில் புதியதாக இணைந்துள்ள தமிழக வெற்றி கழகம் கணிசமான வாக்குகளைப் பிரிக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தேர்தல் முடிவில் மாற்றம் ஏற்படும் வாய்ப்பும் உள்ளதாக மதிப்பிடப்படுகிறது.