மும்பை சார்னி ரோடு பகுதியில் உள்ள செயின்ட் தெரசா உயர்நிலைப் பள்ளியில், தலைமுடி சரியாக வெட்டவில்லை என்ற காரணத்திற்காக மாணவர்களுக்குத் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்வு எழுத வந்த மாணவர்களை அனுமதிக்காமல் பள்ளி நிர்வாகம் தடுத்து நிறுத்தியதால், மாணவர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். இந்த விவகாரம் காட்டுத்தீயாய் பரவ, ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பள்ளிக்கு விரைந்து வந்து நிர்வாகத்திடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
”ஒழுக்கம் முக்கியம்தான், ஆனால் அதற்காக ஒரு மாணவனின் எதிர்காலத்தையே இப்படி சிதைப்பதா?” எனப் பெற்றோர்கள் சரமாரியாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ தற்போது எக்ஸ் (X) வலைதளத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பி வருகிறது. பள்ளி நிர்வாகத்தின் இந்த அதிரடி முடிவுக்கு எதிராக நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.