ஐபிஎல் 2026 தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் முக்கியத் தொடக்க வீரராகக் கருதப்பட்ட இங்கிலாந்தின் பென் டக்கெட் திடீரென தொடரிலிருந்து விலகியுள்ளார். கடந்த ஏலத்தில் 2 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்ட இவர், பிளேயிங் 11-ல் முக்கிய இடத்தைப் பிடித்திருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் கைவிரித்தது டெல்லி நிர்வாகத்திற்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஹாரி புரூக் இதேபோல் விலகி ஏமாற்றிய நிலையில், மீண்டும் ஒரு இங்கிலாந்து வீரரால் டெல்லி அணிக்கு இந்தச் சோதனை ஏற்பட்டுள்ளது.
பிசிசிஐ-ன் புதிய விதிமுறைகளின்படி, ஏலத்தில் எடுக்கப்பட்ட பிறகு காரணமின்றி விலகும் வெளிநாட்டு வீரர்களுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்படும். அந்த வகையில், 2026 ஐபிஎல்-ல் இருந்து விலகிய பென் டக்கெட், வரும் 2027 மற்றும் 2028 சீசன்களிலும் விளையாட முடியாது. அவர் மீண்டும் ஐபிஎல் களத்திற்குத் திரும்ப 2029 வரை காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் அணிகளை ஏமாற்றும் வீரர்களுக்குப் பாடமாக பிசிசிஐ இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருவது கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.