தங்கத்தின் விலையானது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த சில மாதங்களாக புதிய புதிய உச்சத்தை தங்கம் விலை தொட்டது. ஜனவரி மாதம் இறுதியில் ஒரு சவரன் 1.34 லட்சத்தை எட்டியது. இதற்கு முக்கிய காரணமாக டாலரின் மதிப்பிற்கு இணையாக தங்கள் நாட்டின் பணத்தின் மதிப்பை அதிகரிக்கும் வகையில் மத்திய வங்கிகள் தங்கங்களை வாங்கி குவித்தது. இதனால் விலையானது உயர தொடங்கியது. இதற்கிடையே ஈரான்- இஸ்ரேல், அமெரிக்கா போர் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்திற்கு பதிலாக கச்சா எண்ணெய் மீது முதலீட்டை அதிகரித்தனர். இதனால் கடந்த 25 நாட்களில் தங்கத்தின் விலையானது எதிர்பாராத வகையில் குறைந்தது.
ஒரு சவரன் ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஈரான் மீதான் போர் அடுத்த 5 தினங்களுக்கு நிறுத்தப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த அடுத்த சில மணி நேரங்களில் கச்சா எண்ணெய் விலையானது குறைய தொடங்கியது. இதனால் தங்கத்தின் மீதான முதலீடு மீண்டும் அதிகரிக்க தொடங்கியதையடுத்து விலையும் உயர்ந்து வருகிறது.
தங்கத்தின் விலையானது இன்றும் அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 350 ரூபாய் உயர்ந்து 13ஆயிரத்து 600 ரூபாய்க்கும், சவரனுக்கு 2800 ரூபாய் அதிகரித்து 1,08,800 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதே போல வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது.
கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் அதிகரித்து 260 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 10ஆயிரம் ரூபாய் உயர்ந்து 2 லட்சத்து 60ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் சவரனுக்கு 7ஆயிரத்து 500 ரூபாய் உயர்ந்து நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.