2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாகப் போட்டியிடப் போவதில்லை என்றும், திமுக தலைமையிலான கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாகவும் கமல்ஹாசன் அதிரடியாக அறிவித்துள்ளார். தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையின் போது, ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற பரிந்துரை வந்ததாகவும், ஆனால் தனது தொண்டர்களின் அடையாளமான ‘பேட்டரி டார்ச்’ சின்னத்தை விட்டுக்கொடுக்க மனமில்லாமல் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
”சீட்டுகளை விட்டுக்கொடுத்திருக்கிறேன், ஆனால் தமிழ்நாட்டை விட்டுக்கொடுக்க மாட்டேன்” என்று குறிப்பிட்டுள்ள அவர், திராவிட மாடல் 2.0 அரசு அமைவதே இன்றைய தேவை என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழக முதல்வர் அன்போடு அளித்த தொகுதி எண்ணிக்கையை மறுத்தது, ஒரு புதிய அரசியல் நாகரீகத்தின் தொடக்கம் என்றும் கமல்ஹாசன் உருக்கமாகக் கூறியுள்ளார். இந்த அதிரடி முடிவு தற்போது அரசியல் களத்தில் ஒரு புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.