மதுரை மாவட்டத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. பறக்கும் படையினரின் 24 மணி நேர வாகனச் சோதனையில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் ரூ.50 ஆயிரத்திற்கும் அதிகமான ரொக்கம் மற்றும் ரூ.2 லட்சத்திற்கும் மேலான நகைகள் பறிமுதல் செய்யப்படுகின்றன.

இதுவரை ரூ.1 கோடிக்கும் அதிகமான ரொக்கமும், ரூ.60 லட்சம் மதிப்பிலான நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், முறையான விழிப்புணர்வு இல்லாததால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தங்களின் உடைமைகளை மீட்பதில் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சிக்கலைத் தீர்க்க, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் பிரவீன்குமார் தலைமையில் சிறப்பு குறை தீர்க்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆட்சியர் அலுவலகத்தின் புதிய கட்டிடத் தரைத்தளத்தில் இயங்கும் இக்குழுவிடம், பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை மீட்க உரிய ஆதாரங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
அதுமட்டுமின்றி,வங்கி ரசீதுகள், ஜிஎஸ்டி பில்கள், திருமண அழைப்பிதழ்கள் அல்லது மருத்துவ ஆவணங்கள் போன்ற தகுந்த சான்றுகளைச் சமர்ப்பித்து, விசாரணைக் குழுவின் அனுமதி கடிதத்தைப் பெற்ற பின், கருவூலத்திலிருந்து பணம் மற்றும் நகைகளைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.