தூத்துக்குடியில் கடத்தல் முயற்சி ஒன்றை காவலர்கள் துரிதமாக தடுத்து நிறுத்தியுள்ளனர். தாளமுத்துநகர் பகுதியிலிருந்து இலங்கைக்கு விரலி மஞ்சள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கியூ பிரிவு காவலர்கள் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.
இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை, கீழஅலங்காரத்தட்டு பகுதியில் உள்ள பழைய வீட்டில் திடீர் சோதனை நடத்தியது.
அப்போது, இலங்கைக்கு கடத்த தயாராக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவு விரலி மஞ்சள் மற்றும் பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.இந்த சோதனையில், சுமார் 20 கிலோ எடையுள்ள 32 மூட்டைகள் விரலி மஞ்சளும், 15 கிலோ எடையுள்ள 11 மூட்டைகள் பீடி இலைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைப்பற்றப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.25 லட்சம் வரை இருக்கும் என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.மேலும், பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்த கடத்தல் முயற்சியின் பின்னால் உள்ளவர்கள் யார் என்பது குறித்து காவலர்களும் சுங்கத்துறை அதிகாரிகளும் இணைந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.