ஒரு வணிக சிலிண்டர் கொடுத்தால் தினமும் 'பிரியாணி' இலவசம்; அதிரடி ஆஃபர் வழங்கிய உணவகம்..!
Seithipunal Tamil March 27, 2026 05:48 AM

மேற்காசிய போர் காரணமாக இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க மத்திய அரசு சிலிண்டர் விநியோகத்தில் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதனால் உணவகங்களில் வணிக சிலிண்டர்களுக்குக் கடுமையான தட்டுப்பாடு நிலவி வருவதால். பல உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. திறந்திருக்கும் உணவகங்களிலும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒசூரில் உள்ள உணவகம் ஒன்று, ஒரு வணிக கேஸ் சிலிண்டரை தங்களிடம் கொடுத்தால் ஒரு மாதத்திற்கு தினமும் ஒரு சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என விநோதமான ஆஃபரை அறிவித்துள்ளது.

இந்த புதிய ஆஃபர் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இருப்பினும் ஒரு சிலர் எங்களிடம் ஒரு வணிக சிலிண்டர் இருந்தால் நாங்கள் தினமும் எங்களுக்கு பிடித்த உணவுகளை சமைத்த சாப்பிட மாட்டோமா என்றும் நகைச்சுவையாக தெரிவித்துள்ளனர். இந்த ஆஃபர் படி, இதுவரை இரண்டு பேர் வணிக சிலிண்டர்களை கொடுத்து விட்டு தினந்தோறும் பிரியாணி சாப்பிட்டு செல்வதாக ஹோட்டல் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், சிலிண்டர் விநியோகம் இயல்புக்குத் திரும்பும் வரை இந்த ஆஃபர் இருக்கும் எனவும் ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளமை கவனத்தை ஈர்த்துள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.