ஈரான் மற்றும் இஸ்ரேல்- அமெரிக்கா இடையே நடைபெற்று வரும் ஹக்குதல்கள் தீவிரமடைந்துள்ளது. இந்த மோதல் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் மட்டுமின்றி உலக நாடுகளிலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.
மத்திய கிழக்கு போரின் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் உலகளவில் கச்சா எண்ணெய் மற்றும் உரங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இதனை தொடர்ந்து ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து, ஈரான் இந்தியா உள்பட 05 நாடுகளுக்கு ஹார்முஸ் நீரினை வழியே கப்பல்களை கொண்டு செல்லலாம் என்கிற தளர்வை அறிவித்துள்ளது. இதன்படி இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா மற்றும் ஈராக் நாடுகளுக்கான கப்பல்கள் ஹார்முஸ் நீரினை வழியே செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக மூடப்படவில்லை என்றும், நட்பு நாடுகளுக்கு திறந்திருக்கும் என்றும், எதிரி நாடுகளுக்கு மட்டுமே மூடப்பட்டுள்ளது என்று ஈரான் தெளிவுபடுத்தியுள்ளது. அதாவது, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் போரில் அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் நாடுகளின் கப்பல்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, அனுமதி பெற்ற நாடுகளின் கப்பல்கள் ஈரான் மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் உதவக்கூடாது மற்றும் ஈரானின் பாதுகாப்பு விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் ஈரான் வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த ஜலசந்தியைப் பயன்படுத்தும் கப்பல்களுக்கு 'பாதுகாப்பு கட்டணம்' வசூலிப்பதற்கான சட்டத்தையும் ஈரான் நாடாளுமன்றம் தயாரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.