மத்திய அரசு இன்று பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால்தீர்வையை தலா 10 ரூபாய் குறைத்து அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, பெட்ரோல் மீதான வரி 13 ரூபாயிலிருந்து 3 ரூபாயாகவும், டீசல் மீதான வரி 10 ரூபாயிலிருந்து பூஜ்ஜியமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடுத்துள்ள போர் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து முடக்கம் காரணமாக உலகளவில் எரிசக்தி தட்டுப்பாடு நிலவி வருகிறது. உலகின் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு இப்பாதை வழியாகவே நடைபெறுகிறது.
போர் தொடங்குவதற்கு முன்பு இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 12 முதல் 15 சதவீதத்தை இப்பகுதியிலிருந்தே இறக்குமதி செய்து வந்தது. தற்போது ஏற்பட்டுள்ள சர்வதேச நெருக்கடியால் உள்நாட்டில் எரிபொருள் விலை உயராமல் தடுக்கவும், சாமானிய மக்களின் சுமையைக் குறைக்கவும் மத்திய அரசு இந்த அதிரடி வரிக்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இது பொருளாதார ரீதியாக மக்களுக்கு பெரும் நிம்மதியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva