தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தி.மு.க தலைமையிலான கூட்டணி இன்று மாலை வேட்பாளர் பட்டியலை வெளியிடத் தயாராகி வருகிறது. இருப்பினும், கூட்டணியில் உள்ள பிரதான கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தே.மு.தி.க ஆகியவற்றுடன் தொகுதிகளை இறுதி செய்வதில் இன்னும் ஒருசில இடங்களில் இழுபறி நீடிப்பதால், அண்ணா அறிவாலயம் இன்று காலை முதலே பரபரப்பாகக் காணப்படுகிறது.
காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 28 தொகுதிகளில், 23 தொகுதிகள் சுமூகமாக இறுதி செய்யப்பட்டுவிட்டன. ஆனால், மீதமுள்ள 5 தொகுதிகளை முடிவு செய்வதில் நள்ளிரவு வரை நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை எனத் தெரிய வருகிறது.
காங்கிரஸ் தரப்பில் கேட்கப்படும் 'குறிப்பிட்ட அந்த 5 தொகுதி' -களும், தி.மு.க-வின் சிட்டிங் எம்.எல்.ஏ-க்கள் பலமாக உள்ள அல்லது தி.மு.க நேரடியாகப் போட்டியிட விரும்பும் தொகுதிகளாக உள்ளன. இந்த முட்டுக்கட்டையை உடைக்க இன்று காலை 10 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
செல்வப்பெருந்தகை
தி.மு.க கூட்டணிக்குப்புதிதாக வந்துள்ள தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகளில், 8 இடங்கள் முடிவாகிவிட்டன. எஞ்சியுள்ள 2 தொகுதிகளில் தே.மு.தி.க இழுபறி நீடிக்கிறது. தே.மு.தி.க தரப்பில் பிடிவாதமாக இருக்கும் ரிஷிவந்தியம், விழுப்புரம், திருத்தணி, திருக்கோவிலூர் உள்ளிட்ட 6 தொகுதிகளை திமுக கேட்கிறது.
இதில் ரிஷிவந்தியம் தொகுதிதான் இப்போது பெரும் விவாதப் பொருளாகியுள்ளது. அத்தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ-வும், மாவட்டச் செயலாளருமான வசந்தம் கார்த்திகேயன், தனது தொகுதியை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்க முடியாது எனத் தலைமைக்குத் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டாராம். தனது பிடியை அத்தொகுதியில் வலுவாக வைத்துள்ள அவர், அதைத் தே.மு.தி.க-வுக்குத் தரக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
விழுப்புரம் மாவட்டத்தில் தே.மு.தி.க-வுக்குத் தொகுதிகளை ஒதுக்குவதில் அமைச்சர் பொன்முடி தரப்பு ஒரு சுவாரஸ்யமான காய்நகர்த்தலைச் செய்து வருகிறது. விழுப்புரம் அல்லது விக்ரவாண்டி ஆகிய தொகுதிகளில் எதையாவது ஒன்றை தே.மு.தி.க-வுக்குத் தள்ளிவிடலாம் எனப் பேச்சுவார்த்தைக் குழுவிடம் பொன்முடி தரப்பு வலியுறுத்துகிறது.
இதற்குப் பின்னால் ஒரு அரசியல் கணக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. தனது மாவட்டத்தில் தனக்குப் போட்டியாக வளரக்கூடியவர்களை மட்டுப்படுத்தவும், தனக்குச் சாதகமான சூழலை உருவாக்கவும் பொன்முடி இந்த முடிவை ஆதரிப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தே.மு.தி.க-வும், ரிஷிவந்தியம் கிடைக்காவிட்டால் கடைசி வாய்ப்பாக 'விக்ரவாண்டி' தொகுதியைக் கேட்கிறது. விக்ரவாண்டியில் கடந்த இரண்டு இடைத்தேர்தல்களிலும் தி.மு.க-வே வென்றுள்ள நிலையில், அதை விட்டுக்கொடுக்க கட்சித் தலைமை தயக்கம் காட்டுகிறது.
`K.N நேரு டிக், T.R.B ராஜா பரிந்துரை' - பட்டுக்கோட்டை தொகுதி திமுக ரேஸில் முந்துவது யார்?இந்தத் தொகுதிச் சிக்கல்களை இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் தீர்த்துவிட்டு, தே.மு.தி.க மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் விவரங்களை இறுதி செய்ய தி.மு.க மேலிடம் தீவிரம் காட்டி வருகிறது. இன்று மாலைக்குள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டால் மட்டுமே தேர்தல் பணிகளை விரைவுபடுத்த முடியும் என்பதால், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இறுதி முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.
அண்ணா அறிவாலயத்தில் நிலவும் இந்த 'கடைசி நேர பரபரப்பு', தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.