Trump Iran War: ”நான் செத்துட்டேனா” மொஜ்தாபா சர்ப்ரைஸ், அடித்து விட்டாரா ட்ரம்ப்? - ஈரான் போர் நிலவரம் என்ன?
குலசேகரன் முனிரத்தினம் March 30, 2026 09:14 AM

Trump Iran War: ஈரானிற்கு ஆதரவு தெரிவித்த ஈராக் மக்கள் மற்றும் மதகுருமார்களுக்கு, மொஜ்தாபா தரப்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈராக்கிற்கு நன்றி சொன்ன மொஜ்தாபா..

ஈரானின் உச்சபட்ச தலைவரான அயதுல்லா மொஜ்தபா கமேனி, "ஆக்கிரமிப்பை எதிர்கொண்டு வரும் தெஹ்ரானுக்கு ஆதரவளித்ததற்காக ஈராக் மக்களுக்கும், அந்நாட்டின் மதத் தலைமைக்கும் நன்றி தெரிவித்துள்ளார்” என ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தச் செய்தி, அவரது ஆரோக்கியம் மற்றும் இருப்பிடம் குறித்த மர்மத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கையை தொடர்ந்து, ஈரானின் புதியதாக நியமிக்கப்பட்ட உச்ச தலைவர் இறந்துவிட்டார் அல்லது கவலைக்கிடமான நிலையில் உள்ளார் என்று சில தினங்களுக்கு முன்பாக ட்ரம்ப் பேசியிருந்தார். இந்நிலையில் தான் ஞாயிற்றுக்கிழமையான் நேற்று அவரது சார்பில் ஈராக்கிற்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ட்ரம்பின் கூற்றுகளை பொய்யாக்கும் விதமாக அமைந்துள்ளது.

ட்ரம்ப் சொன்னது என்ன?

ஈரானின் ராணுவத் தலைமை மற்றும் பாதுகாப்பு கட்டமைப்பு முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது எனவும்,மொஜ்தபா கமேனியின் நீண்டகால மௌனம் அவர் இனி உயிருடன் இல்லை என்பதையே சுட்டிக்காட்டுகிறது என்றும் ட்ரம்ப் பேசியிருந்தார். மேலும், “ஈரானின் தலைவர்கள் இறந்துவிட்டனர். அவர்களின் உச்ச தலைவர் இனி உச்ச நிலையில் இல்லை. அவர் இறந்துவிட்டார். அவருடைய மகன் இறந்துவிட்டார் அல்லது மிகவும் மோசமான நிலையில் இருக்கிறார். ஏனென்றால் அவரிடமிருந்து யாருக்கும் எந்தத் தகவலும் இல்லை. என்னை இதில் இருந்து விலக்கி வையுங்கள் என்று அவர் சொல்வதாக நான் நினைக்கிறேன்” என ட்ரம்ப் பேசியிருந்தார். இதனிடையே, மொஜ்தாபாவின் நிலை குறித்து ஈரான் தரப்பில் இதுவரை நேரடி வீடியோ காட்சி ஆதாரங்களும் வெளியிடப்படவில்லை. ஈராக்கிற்கு எந்த வடிவத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது என்பது குறித்த விவரங்களும் வழங்கப்படவில்லை. இதனால் ட்ரம்ப் பொய் சொல்கிறாரா? அல்லது ஈரான் எதையேனும் மறைக்கிறதா? என்ற சந்தேகம் தீவிரமடைந்துள்ளது.

பொதுவெளியில் தோன்றாத மொஜ்தாபா..

அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதலில் அயதுல்லா அலி கமேனி இறந்ததைத் தொடர்ந்து, மார்ச் 9 அன்று அவரது மகனான மொஜ்தாபா புதிய உச்ச தலைவராக பதவியேற்றார். ஆனால்,  அதன் பிறகு ஒருமுறை கூட அவர் பொதுவெளியில் தோன்றவில்லை. மார்ச் 12 அன்று அவர் ஆற்றிய முதல் உரை மற்றும் மார்ச் 20 அன்று அவர் ஆற்றிய நவ்ரூஸ் செய்தி உட்பட, இதுவரை அவர் கூறியதாகக் கூறப்படும் அனைத்து அறிக்கைகளும் எழுத்து வடிவில் வெளியிடப்பட்டு, அரசு தொலைக்காட்சி தொகுப்பாளர்களால் மட்டுமே வாசிக்கப்பட்டுள்ளன.

மேற்கு ஆசியாவில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெஹ்ரானில் முடிவெடுக்கும் அதிகாரத்தை உண்மையில் கைவசம்வைத்திருப்பது யார் என்பது இன்னும் மர்மமாகவே நீடிக்கிறது. அதிபர் ட்ரம்பின் உளவுத்துறை விளக்கங்களிலும் இந்த விவகாரம் இடம்பெற்றுள்ளதாகவும், ஈரானுக்குள் உள்ள அதிகாரப் படிநிலையை அமெரிக்க அதிகாரிகள் இன்னும் கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

பாகிஸ்தான் தீவிரம்

இதனிடையே, மேற்காசியாவில் விரிவடைந்து வரும் பிராந்தியப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், வரும் நாட்களில் இஸ்லாமாபாத்தில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகளை நடத்தத் தயாராகி வருவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. சவூதி அரேபியா, துருக்கி மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் கலந்தாலோசித்த பிறகு பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் டார், வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையே சாத்தியமான நேரடிப் பேச்சுவார்த்தைகளுடன், மோதலுக்கு விரைவான மற்றும் நிரந்தர முடிவைக் கொண்டுவருவதை மையமாகக் கொண்டு இந்த விவாதங்கள் நடைபெற்றதாக விளக்கமளித்தார். ஆனாலும், பாகிஸ்தான் முன்னெடுக்கும் பேச்சுவார்த்தையில் அமெரிக்காவும் ஈரானும் பங்கேற்க ஒப்புக்கொண்டனவா என்பது குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.