எகிப்து நாட்டின் அஸ்வான் நகரம் வழக்கமாக வறண்ட பாலைவனப் பகுதியாகக் கருதப்படும் சூழலில் கடந்த 2021ம் ஆண்டில் அங்கு ஏற்பட்ட இயற்கைப் பேரிடர் உலகையே அதிர வைத்தது. ஆண்டு முழுவதும் மிகக் குறைந்த அளவே மழையைப் பார்க்கும் அந்த நகரத்தில் திடீரெனப் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழையினால் சாலைகள் அனைத்தும் ஆறுகளைப் போல மாறின.
நைல் நதியின் நீர்மட்டம் உயர்ந்து நகருக்குள் வெள்ளம் புகுந்ததால் வீடுகள் மற்றும் கடைகள் கடுமையாகச் சேதமடைந்தன. இந்த வெள்ளப்பெருக்கின் போது மின்சாரக் கம்பிகள் அறுந்து விழுந்து மின்சாரம் பாய்ந்ததில் ராணுவ வீரர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
வெள்ளத்தைத் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான விஷத் தேள்கள் மற்றும் பாம்புகள் நகருக்குள் புகுந்ததால் அஸ்வான் நகரம் மரண பீதியில் ஆழ்ந்தது. வெள்ள நீரினால் நிலத்தடிப் பொந்துகள் நிரம்பியதால் வெளியேறிய இந்த விஷ ஜந்துக்கள் மக்களின் வீடுகளுக்குள் புகுந்துத் தாக்குதல் நடத்தின.
இதில் தேள் கொட்டியதால் மட்டும் ஐநூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக மருத்துவமனைகளில் போதிய அளவில் விஷமுறிவு மருந்துகள் இருந்ததால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன.
பாலைவனச் சோலையாகத் திகழ்ந்த ஒரு நகரம் இயற்கைச் சீற்றத்தினால் சில மணி நேரங்களிலேயே விஷ ஜந்துக்களின் புகலிடமாக மாறியது அந்த நாட்டு மக்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.