குவைத்: அமெரிக்க ராணுவ தளத்தின் மீது ஈரான் தாக்குதல்; முதுகுளத்தூர் வாலிபர் பலி
Vikatan March 31, 2026 11:48 AM

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ளது அணிக்குருந்தன் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் சந்தான செல்வம் (37).

இவருக்கு கெளசல்யா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் சந்தான செல்வம் கடந்த 12 ஆண்டுகளாக குவைத்தில் உள்ள தனியார் நிறுவனமான அல் அதோ என்ற இஞ்சினியரிங் கம்பெனியில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார்.

ஈரான் தாக்குதல்

இந்நிலையில் மேற்கு ஆசியாவில் உள்ள ஈரான் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேல் நாடுகள் தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. இந்தத் தாக்குதல்களுக்குப் பதிலடி தரும் விதமாக ஈரான் நாடும், இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது.

Iran: மேற்கு ஆசியாவிற்குள் நுழைந்த அமெரிக்கப் போர்க்கப்பல்; ஈரான் எல்லையில் பதற்றம்?

நேற்று முன் தினம் இரவு குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ராணுவ தளத்தின் அருகே உள்ள அல் அதோ என்ற தனியார் நிறுவனமும் பாதிப்படைந்தது.

இந்தத் தாக்குதலில் அங்கு பணியாற்றி வந்த சந்தான செல்வம் குண்டு காயம் அடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இது குறித்த தகவல் அந்நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் மூலம் கெளசல்யாவிற்குத் தெரிய வந்தது. ஆனால் தனது கணவரின் நிலையை அறிந்து கொள்ள மீண்டும் அவர்களை கெளசல்யா தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அங்கிருந்தவர்கள் இவரது அழைப்பை ஏற்கவில்லை.

சந்தான செல்வம்

இந்நிலையில் இந்திய தூதரக அதிகாரிகள் சந்தான செல்வம் உயிரிழந்த தகவலை அணிக்குருந்தன் கிராம நிரிவாக அதிகாரிக்குத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த அதிகாரி, சந்தான செல்வம் இறப்பு குறித்து அவரது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார்.

தகவலை அறிந்த சந்தான செல்வம் குடும்பத்தினர் மற்றும் அணிக்குருந்தன் கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும், ஈரான் தாக்குதலில் பலியான சந்தான செல்வத்தின் உடலை தங்கள் கிராமத்திற்குக் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Iran: பேச்சுவார்த்தைக்கு சம்மதித்த ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா: அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யப்படுமா?
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.