வில்லிவாக்கத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட கழக மகளிர் மீது கண்ணாடி துண்டுகள் மற்றும் பாட்டில்கள் வீசித் தாக்குதல் நடத்தி அராஜகத்தில் ஈடுபட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் கூறியுளார்.
இதுதொடர்பாக என்.ஆனந்த் தனது எக்ஸ் தளத்தில், “வில்லிவாக்கத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட கழக மகளிர் மீது கண்ணாடி துண்டுகள் மற்றும் பாட்டில்கள் வீசித் தாக்குதல் நடத்தி அராஜகத்தில் ஈடுபட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழக வெற்றிக் கழகத்திற்கு தமிழ்நாட்டு மகளிரிடையேயும் மக்களிடையேயும் இருக்கும் ஆதரவைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள், தமிழக வெற்றிக்கழக தோழர்களை அச்சுறுத்தும் வகையில், பின்புற வாசல் வழியாக, வன்முறையில் ஈடுபட்டாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று துடித்துக்கொண்டிருக்கிறார்கள். பிற அரசியல் இயக்கப் பொதுக்கூட்டத்தில் வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுபவர்கள், மக்களிடையே நற்பெயரை எடுத்திருந்தால் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டு வெற்றியைத் தேடி அலைய வேண்டிய அவசியம் இருக்காது. இன்றைய வில்லிவாக்கம் தவெக பொதுக்கூட்டத்தில் பெண்கள் மீது கண்ணாடி பாட்டில் துகள்கள் வீசித் தாக்குதல் நடத்திய கயவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும். காவல்துறை நேர்மையாக செயல்படுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறான கீழ்த்தரமான செயல்களால் தமிழக வெற்றிக் கழகத்தை வீழ்த்திவிடலாம் என்று எண்ணுபவர்களுக்கு தமிழக மக்கள் வரும் தேர்தலில் தக்க பதிலடியைத் தருவார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.