இஸ்ரேலில் பொதுவாக மரணதண்டனை விதிக்கப்படுவதில்லை ஆனாலும், விதிவிலக்காக 1948-ஆம் ஆண்டு மேயர் டோபியன்ஸ்கி என்பவருக்கும், 1962-இல் நாஜி கொலை குற்றவாளியான அடால்ஃப் ஏச்மேன் என்பவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அதன் பின்னர் இஸ்ரேலில் இதுவரை யாருக்கும் சட்டரீதியாக மரண தண்டனை விதிக்கப்படவில்லை. தற்போது உள்ள சட்டங்களின் அடிப்படையில் சிவில் நீதிமன்றங்களால் மரண தண்டனை வழங்க முடியாது. இருப்பினும், ராணுவ நீதிமன்றத்தில் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் 03 நீதிபதிகளும் மரண தண்டனை வழங்கினால் அவருக்கு மரண தண்டனை வழங்கப்படும்.
கடந்த 1962-க்கு பின்னர் இது வரை இந்த சட்டத்தின் மூலம் யாருக்கும் மரண தண்டனை விதிக்கப்படவில்லை. இந்த சூழலில், இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் பாலஸ்தீனியர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்ட முன்மொழிவு பெரும்பான்மை ஆதரவோடு நிறைவேற்றப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன், இந்த மரணதண்டனை சட்டம் மேற்குக்கரை பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டத்தின்படி இஸ்ரேலியர்களைக் கொல்லும் நோக்கில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் நபர்களுக்கு இனி மரண தண்டனை விதிக்கப்படும் என்றும், ராணுவ நீதிமன்றத்தில் உள்ள பெரும்பான்மை நீதிபதிகள் ஒப்புதல் அளித்துள்ளதால், இந்த சட்டம் நிறைவேற்றப்படும் என்றும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு வழங்கப்பட்ட 90 நாட்களுக்குள் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், இஸ்ரேலிய அதிபரால் கூட அவருக்கு மன்னிப்பு வழங்கமுடியாது என்றும் இந்த சட்டத்தில் மேலும் கூறப்பட்டுள்ளது.
இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் இந்த சட்டத்துக்கு 62 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 48 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்துள்ளனர். ஆனாலும், இந்த சட்டத்துக்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள நிலையில், இஸ்ரேலுக்குள்லேயே இந்த சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டமை காசாவில் உள்ள இஸ்ரேலிய பிணைக்கைதிகளின் உயிருக்கு ஆபத்தாக முடியும் என்றும் சிலர் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த சட்டத்துக்கு எதிராக இஸ்ரேலிய உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.