இந்தியாவில் இதுவரை 15 மக்கள்தொகை கணக்கெடுப்புகள் நடைபெற்றுள்ளன. இதில் சுதந்திரத்திற்கு பிறகு 07 கணக்கெடுப்புகள் நடந்துள்ளன. அதன்படி, ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை கணக்கெடுப்பு நடத்தப்படும் நிலையில் 2021ஆம் ஆண்டு நடத்தப்படவேண்டிய கணக்கெடுப்பு கொரோனா காரணமாக நடைபெறவில்லை.
இந்நிலையில், 05 ஆண்டு தாமதத்திற்கு பிறகு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறுகிறது. கடந்தமுறை நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் நாட்டின் மக்கள்தொகை 121 கோடியே 08 லட்சத்து 54 ஆயிரத்து 977ஆக இருந்தது. தற்போது 140 கோடிக்கு மேற்பட்டோரின் விவரங்களை சேகரிப்பதால் உலகின் மாபெரும் கணக்கெடுப்பு நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.
இந்த மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக இந்தியாவில் முதல்முறையாக டிஜிட்டல் தொழில்நுட்ப உதவி பயன்படுத்தப்படுகிறது.

அதன்படி, இந்த கணக்கெடுப்பில் மக்களின் தரவுகள் மொபைல் செயலி மூலம் பதிவு செய்யப்படும். பொதுமக்களே நேரடியாக வலைத்தளம் வாயிலாக தங்கள் விவரங்களை பதிவிடலாம் என்று கூறப்படுகிறது. இந்த கடைகெட்டபின் போது பெயர், வயது, வீடு, பொருட்கள் உள்ளிட்டவை தவிர சாதி குறித்த விவரங்களும் கேட்கப்படவுள்ளது.
வரும் 2027 பிப்ரவரியில் 02-ஆம் கட்ட கணக்கெடுப்பு நடைபெற்று, 2027 மார்ச் 01ந் தேதி மக்கள்தொகை விவரம் அறிவிக்கப்படும். இதில் தெரியவரும் தகவல்களை வைத்தே நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதி சீரமைப்பு, பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் 02 பிரிவாக நடைபெறும். இதில் முதல் பிரிவில் மக்கள் தங்களை பற்றிய விவரங்களை அரசு இணையதளத்தில் தாங்களே பதிவு செய்யலாம். இதற்காக தமிழ் உள்ளிட்ட 16 மொழிகளில் இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, சுய விவரங்களை பதிவு செய்வோருக்கு 16 இலக்க எண் தரப்படும். மக்கள்தொகை கணக்கெடுப்பாளர் வீட்டிற்கு நேரடியாக வரும் போது இந்த எண்ணை வழங்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் ஆதார் உட்பட எந்த ஆவணங்களையும் வழங்கத்தேவையில்லை என்றும், பொதுமக்கள் வழங்கும் தகவல்களின் ரகசியத்தன்மை காக்கப்படும் என்றும் அரசு உறுதியளித்துள்ளது. அடுத்தாண்டு பிப்ரவரியில் நடக்கும் 02-வது கட்ட கணக்கெடுப்பின்போது சாதி உள்ளிட்ட பல்வேறு விவரங்களை கூறவேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது உள்ளாட்சி அமைப்பால் வழங்கப்பட்ட கட்டடத்தின் எண் அல்லது வீட்டு எண் முதலாவது கேள்வியாக இருக்கும். வீட்டின் தரையின் வகை, எந்தப்பொருளால் சுவர் கட்டப்பட்டது, கூரை எந்தப்பொருளால் ஆனது ஆகிய கேள்விகளும் கேட்கப்படும். கட்டடம் குடியிருப்பு நோக்கில் பயன்படுகிறதா அல்லது வணிக நோக்கில் பயன்படுகிறதா, வீட்டின் ஒட்டுமொத்த நிலை ஆகிய தகவல்களையும் தரவேண்டியிருக்கும். வீட்டில் உள்ளவர்கள் எண்ணிக்கை, வயது, பாலினம் ஆகிய விவரங்களை தெரிவிக்கவேண்டும்.
வீட்டின் தலைவர் பட்டியலினத்தவரா என்ற விவரத்தையும் அளிக்கவேண்டும். அத்துடன், வீட்டின் உரிமை யார் பெயரில் உள்ளது, வீட்டிலுள்ள அறைகள், மின்சார வசதி, கழிப்பறை வசதி, குடிநீர் ஆதாரம், சமையல் எரிபொருள் விவரம் ஆகிய அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்கப்படும். ரேடியோ, டிவி, கணினி, தொலைபேசி, இணைய வசதி உள்ளிட்டவை இருக்கிறதா என்பது குறித்து தெரிவிக்கவேண்டும்.
மேலும், மொபெட், பைக், ஸ்கூட்டர், கார் உள்ளிட்ட வாகனங்கள் குறித்த விவரமும் கேட்கப்படுகிறது. தினசரி உணவுக்கான பிரதான தானியம் எது என்பதையும் கூற வேண்டியிருக்கும். இறுதியாக செல்போன் எண்ணையும் தரவேண்டியிருக்கும். இதில் கிடைக்கும் தரவுகள் அடிப்படையில்தான் குடிநீர், மின்சாரம், சுகாதாரம் உள்ளிட்ட அரசின் கொள்கைகளும் வளர்ச்சித் திட்டங்களும் வகுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.