GT vs PBKS: "அந்தத் தருணம் தான் எங்கள் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது.!" - கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்
Vikatan April 01, 2026 02:48 PM

ஐபிஎல் தொடரின் நேற்றைய (மார்ச் 31) போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் குஜராத் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம், 2021-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 6 ஆண்டுகளாகத் தனது முதல் லீக் போட்டியில் வெற்றி பெற்று பஞ்சாப் அணி சாதனை படைத்துள்ளது.

PBKS

இந்நிலையில் வெற்றிக்குப் பிறகு பேசிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், "சீசனை வெற்றியுடன் தொடங்குவது எப்போதுமே ஒரு சிறந்த உணர்வு.  முதலில் பந்துவீச முடிவு செய்தது சரியானதாக அமைந்தது.

எங்கள் பந்துவீச்சாளர்கள், குறிப்பாக வைஷாக் மற்றும் சஹால் இருவரும் ரன்களைக் கட்டுப்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்தியது ஆட்டத்தின் போக்கை மாற்றியது. 162 ரன்களுக்குள் அவர்களைக் கட்டுப்படுத்தியது எங்களுக்குச் சாதகமாக அமைந்தது.

ஆட்டத்தின் இடையில் எனது கையில் ஏற்பட்ட காயம் காரணமாக நான் அதில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தேன், அப்போது திடீரென அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது சற்று பதற்றத்தைத் தந்தது. ஆனால் இதுபோன்ற சூழலில் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம்.   

பேட்டிங்கில் அறிமுக வீரர் கூப்பர் கோனோலி விளையாடிய விதம் அற்புதம். முதல் போட்டியிலேயே இவ்வளவு நிதானமாகவும், அதே சமயம் அதிரடியாகவும் விளையாடி வெற்றியைத் தேடித்தந்தது பாராட்டுக்குரியது. 

மூன்றாவது ஓவருக்குப் பிறகுதான் ஆடுகளம் மெதுவாக இருப்பதை உணர்ந்தோம். இருப்பினும், ஒரு அணியாக நாங்கள் காட்டிய உறுதி எங்களுக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தது.

இந்த வெற்றியின் மூலம் கிடைத்த உத்வேகத்தை அடுத்தடுத்த போட்டிகளிலும் தொடர விரும்புகிறோம். எங்களுடைய இந்த வெற்றிப் பயணத்தைத் தொடர ஒவ்வொரு வீரரும் கடினமாக உழைப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது," என்று பேசியிருக்கிறார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.