தேர்தல் செலவுக்கு தாங்க..எடப்பாடிக்கு போன் போட்ட வாசன்! கறார் காட்டிய எடப்பாடி! பாஜகவை கைகாட்டிய அதிமுக!
Seithipunal Tamil April 01, 2026 03:48 PM

தமிழக சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு கூட்டணிக் கட்சிகளுக்குள் தேர்தல் செலவு தொடர்பான பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ளன. அந்த வகையில், அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் (த.மா.கா.) தலைவர் ஜி.கே. வாசன் வைத்த கோரிக்கையை எடப்பாடி பழனிச்சாமி நிராகரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுக கூட்டணியில் த.மா.காவுக்கு ஒட்டன்சத்திரம், ஈரோடு மேற்கு, ராணிப்பேட்டை, கிள்ளியூர், கும்பகோணம் ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த தொகுதிகளில் த.மா.கா. வேட்பாளர்கள் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், இந்த தொகுதிகளில் பலம் வாய்ந்த திமுக வேட்பாளர்கள் மற்றும் அமைச்சர்கள் எதிரில் இருப்பதால், தேர்தலை சமமாக சந்திக்க அதிக நிதி தேவைப்படுவதாக த.மா.கா. தரப்பில் கருத்து எழுந்தது. இதையடுத்து, ஜி.கே. வாசன், எடப்பாடி பழனிச்சாமியிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு, ஒவ்வொரு தொகுதிக்கும் சுமார் ₹5 கோடி வீதம் மொத்தம் ₹25 கோடி தேர்தல் செலவுக்காக வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.

ஆனால், இதற்கு எடப்பாடி பழனிச்சாமி மறுப்பு தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. “இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டிருந்தால் செலவை அதிமுக ஏற்றுக்கொண்டிருக்கும். ஆனால் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறீர்கள்; அதனால் பாஜகவிடம் கேளுங்கள்” என்று அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் சிக்கலில் சிக்கியுள்ள த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன், தற்போது பாஜக தேசிய தலைமையை அணுகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மறுபுறம், பாஜக தரப்பில் இருந்து, தேர்தல் நிதி இன்னும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை என்றும், விரைவில் அது கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. அதேசமயம், அந்த நிதி நேரடியாக கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்படுமா அல்லது பாஜக வழியே செலவிடப்படுமா என்பது குறித்து இன்னும் தெளிவு இல்லை.

இந்த தேர்தல் செலவு விவகாரம், அதிமுக கூட்டணிக்குள் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து அரசியல் வட்டாரங்கள் கவனமாக நோக்கி வருகின்றன.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.