“கோவை தெற்கு நம்ம தன்மான பிரச்சனை”! 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி! செந்தில் பாலாஜிக்கு எதிராக வேலுமணி மாஸ்டர் பிளான்!
Seithipunal Tamil April 01, 2026 03:48 PM

தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கோவை தெற்கு தொகுதி அரசியல் ரீதியாக ‘ஹாட் சீட்’ ஆக மாறியுள்ளது. இந்த நிலையில், அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, கோவை தெற்கு வெற்றியை கட்சியின் “தன்மானப் பிரச்சனை” எனக் குறிப்பிட்டு தீவிர பிரச்சாரத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

கோவை தெற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளராக அம்மன் அர்ஜூனன் களமிறங்கியுள்ள நிலையில், அவரை குறைந்தது 50,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என வேலுமணி வலியுறுத்தினார். “கவுன்டவுன் ஸ்டார்ட் ஆகிவிட்டது, இன்னும் 20 நாட்கள் முழு வேகத்தில் வேலை செய்ய வேண்டும்” என்றும் அவர் கூறினார்.

மேலும், கோவை தெற்கு ‘விஐபி தொகுதி’யாக மாறிவிட்டதாகவும், திமுக சார்பில் போட்டியிடும் செந்தில் பாலாஜியை நேரடியாக விமர்சித்தும் பேசியார். “கோவைக்கு திமுக எந்த திட்டமும் கொண்டு வரவில்லை. அதிமுக செய்த திட்டங்களையே திறந்து வைத்து வருகின்றனர்” என்று குற்றம்சாட்டினார்.

அதேபோல், மாநிலத்தில் சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை சுட்டிக்காட்டிய அவர், பெண்களின் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் பிரச்சினைகளையும் முன்வைத்து திமுக ஆட்சியை விமர்சித்தார்.

விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தையும் அவர் கடுமையாக விமர்சித்தார். “அரசியல் வேறு, சினிமா வேறு என்பதை விஜய் புரிந்துகொள்ள வேண்டும். திமுக எதிர்ப்பு ஓட்டுகளை பிரித்து, அவர்களுக்கு உதவுவதே இவர்களின் அரசியல்” என குற்றம் சாட்டினார்.

மேலும், கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றும் தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

மொத்தத்தில், கோவை தெற்கு தொகுதியில் கடும் போட்டி நிலவும் சூழலில், அதிமுக இந்த இடத்தை ‘பிரஸ்டீஜ் பேட்டில்’ ஆகக் கொண்டு முழு வலுவுடன் களமிறங்கியுள்ளது. தேர்தல் முடிவு இந்த தொகுதியில் முக்கிய அரசியல் சிக்னலை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.