தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான அரசியல் களம் ஒவ்வொரு மணிநேரமும் ஒரு புதிய திருப்பத்தைச் சந்தித்து வருகிறது. அந்த வகையில், ஓ. பன்னீர்செல்வம் (OPS) அணியின் முக்கியத் தூணாகக் கருதப்பட்ட உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், ஓபிஎஸ் மீது "நம்பிக்கை துரோகம் மற்றும் ராஜ துரோகம்" என அதிரடிப் புகார்களைச் சுமத்திவிட்டு, தற்போது சசிகலா தலைமையிலான அணியில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் நிலநடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சட்டமன்றக் கூட்டத்தொடரில் பேசிய ஐயப்பன், ஆளும் திமுக அரசின் மக்கள் நலத் திட்டங்களையும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் செயல்பாடுகளையும் பகிரங்கமாகப் பாராட்டிப் பேசினார். இது அதிமுக மற்றும் ஓபிஎஸ் தரப்பினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தற்போது ஓபிஎஸ் திமுகவில் இணைந்த நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஓபிஎஸ்ஸை நம்பிச் சென்ற தங்களுக்குக் ஏமாற்றமே மிஞ்சியதாக உருக்கமாகத் தெரிவித்தார். "நாங்கள் உண்மையாக நம்பி ஓபிஎஸ் பின்னால் சென்றோம்; ஆனால் அவர் தனது சுயநலத்திற்காகத் தொண்டர்களுக்கும், தன்னை நம்பியவர்களுக்கும் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார். இது ஒரு ரகசிய ராஜ துரோகம்" என்று அவர் ஆவேசமாகக் குறிப்பிட்டார்.
தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வாக, அஇ புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் சசிகலாவை நேரில் சந்தித்து ஐயப்பன் அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். "அதிமுகவின் உண்மையான விசுவாசிகளை ஒருங்கிணைக்கும் சக்தி சசிகலாவிடமே உள்ளது" என்று அவர் கூறினார்.