உலகின் மிகவும் மகிழ்ச்சியற்ற நாடுகளின் பட்டியலில் ஆப்கானிஸ்தான் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ஒரு நாட்டின் மகிழ்ச்சி என்பது அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, சமூக ஆதரவு, தனிநபர் சுதந்திரம் மற்றும் ஊழல் இல்லா நிர்வாகம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.
வேர்ல்ட் ஹேப்பினஸ் ரிப்போர்ட் அறிக்கையின்படி, இந்த அளவீடுகளில் மிக மோசமான நிலையில் உள்ள நாடுகளில், மக்கள் ஒவ்வொரு நாளையும் பெரும் அச்சத்தோடும், எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மையுடனும் எதிர்கொள்கின்றனர்.
ஆப்கானில் தாலிபான்களின் ஆட்சியின் கீழ் உள்ள பெண்களுக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மறுக்கப்படுவது, அந்நாட்டு மக்களின் மன அழுத்தத்தை உலக அளவில் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தானைத் தொடர்ந்து லெபனான் மற்றும் சியரா லியோன் போன்ற நாடுகள் இந்தப் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. லெபனானில் நிலவும் கடும் பொருளாதார வீழ்ச்சி, அந்நாட்டின் பண மதிப்பைச் சிதைத்ததோடு, நடுத்தர வர்க்க மக்களைக் கூட அடிப்படை உணவுத் தேவைகளுக்காகப் போராடும் நிலைக்குத் தள்ளியுள்ளது.
அதாவது, போரினால் பாதிக்கப்பட்ட நாடுகள் மற்றும் உள்நாட்டுப் பூசல்கள் நிறைந்த ஆப்பிரிக்க நாடுகளில், பாதுகாப்பு என்பது ஒரு கனவாகவே உள்ளது. அங்குள்ள மக்கள் வன்முறை, பசி மற்றும் போர்க்காலச் சூழல்களால் சூழப்பட்டுள்ளது. இதனால், அவர்களின் வாழ்நாளில் மகிழ்ச்சி என்பது எதிர்பார்க்கமுடியாத ஒன்றாகவே உள்ளது.
அடுத்ததாக, காங்கோ ஜனநாயகக் குடியரசு, ஜிம்பாப்வே போன்ற நாடுகளில் நிலவும் அரசியல் ஸ்திரமின்மை மற்றும் கட்டுக்கடங்காத பணவீக்கம் ஆகியவை மக்களின் அன்றாட வாழ்வைச் சிதைத்துள்ளன. இந்த நாடுகளில் அதீத ஊழல் காரணமாக, சர்வதேச உதவிகள் கூட ஏழை மக்களைச் சென்றடைவதில்லை என்று கூறப்படுகிறது.