எஸ்.பி.பி. என்று அன்புடன் அழைக்கப்படும் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் 40,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி உலக சாதனை படைத்ததோடு,தென்னிந்திய திரையுலகத்தின் நெஞ்சை வருடிய குரலாக மாறினார்.
இத்தகைய நித்திய நட்சத்திரத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள வி.டி. பட்டதிரிபாட் நினைவிடத்தில் அவரது உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது.
கோவை கொச்சி தேசிய நெடுஞ்சாலையில், பாலக்காடு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை அருகே உள்ள வி.டி. பட்டத்திரிப்பாடு நினைவகத்தில், கண்ணுார் பய்யன்னுாரை சேர்ந்த சிற்பி கானாயி உன்னி வடிவமைத்த பத்தடி உயரமுள்ள எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் கண்ணாடி உலோக சிலையை, ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் கீரவாணி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், பாடகர்கள் சித்ரா, சுஜாதா, ஹரிஹரன், உன்னி மேனன், ஸ்ரீநிவாஸ், விஜய் ஜேசுதாஸ், எஸ்.பி.பி. சரண், பல்லவி, மனோ, மது பாலகிருஷ்ணன், சுதீப்குமார், ரவி சங்கர், திரைப்பட நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் உட்பட தென்னிந்தியாவின் முன்னணி கலைஞர்கள் கலந்து கொண்டனர். அதன்பின், 'சங்கீத மேகம்' என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடந்தது.