சென்னை அண்ணா சாலையில் தனியார் சொகுசு கார் உதிரி பாக குடோனில் தீ விபத்து..!
Seithipunal Tamil April 03, 2026 03:48 AM

சென்னை அண்ணாசாலை ஜி.பி ரோடு பகுதியில் உள்ள கே.ஆர் காம்ப்ளெக்ஸ் வணிக வளாகத்தின் கீழ்தளம் மற்றும் முதல் தளத்தில் பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக தனியாருக்கு சொந்தமான சொகுசு கார் மற்றும் இருசக்கர வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மாடியில்  உதிரிபாகங்கள் சேமித்து வைத்திருந்த குடோனில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தீ ஏற்பட்டதினால் அதிர்ச்சி அடைந்த கடை ஊழியர்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடிவந்துள்ளனர்.இந்த் விபத்து குறித்து தீயணைப்பு மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் அண்ணாசாலை போலீசார் மற்றும் திருவல்லிக்கேணி, மைலாப்பூர், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 06 தீயணைப்பு வாகனத்தில் வந்த 20 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீயானது அருகில் உள்ள கட்டிடங்களுக்கு பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகளை தீயணைப்பு வீரர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், மின்வாரிய ஊழியர்கள் அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டித்ததுள்ளனர். மேலும், அந்த வழியாக வாகனங்கள் செல்ல தடை விதித்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்த தீவிபத்தில் யாருக்கும் அதிர்ஷ்டவசமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மாறாக பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. நீண்ட போராட்டத்திற்கு தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்‌.

இந்த தீ விபத்துக்கு வெல்டிங் செய்யும் போது தீப்பொறி பட்டு தீப்பற்றியதா.? அல்லது மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.