தாம்பரம் அரச மருத்துவமனையில் 08 லேப்டாப்களை திருடிய கொள்ளையர்கள்; சிறையில் இருந்து வெளியில் வந்தும் மாறாத திருட்டுப்புத்தி..!.
Seithipunal Tamil April 03, 2026 04:48 AM

சென்னை தாம்பரம் சானடோரியம் பகுதியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அமைந்துள்ளது. புதிதாக கட்டப்பட்டு ஓராண்டே ஆன நிலையில், இந்த மருத்துவமனைக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இங்கு மருத்துவமனையில் அலுவலகப் பயன்பாட்டிற்கு என தனியாக ஒரு கட்டடம் உள்ளது. அதில் தலைமை மருத்துவர் உட்பட அலுவலகப் பணியை மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு என தனியாக லேப்டாப்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று காலை பணிக்கு வந்த மருத்துவர்கள், தங்களது அறைக்குச் சென்றுள்ளனர். அப்போது அறையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த லேப்டாப்கள் திருடப்பட்டுள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இது குறித்து மருத்துவமனை நிர்வாகம், தாம்பரம் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்த நிலையில், புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

அதில் அதிகாலை நான்கு மணி அளவில் மருத்துவமனை வளாகத்தில் மர்ம நபர்கள் இருவர் முகத்தில் துணியை கட்டியவாறு நுழைந்தது தெரிய வந்தது. அவர்கள் அலுவலக அறையின் கதவை கடப்பாரையால் உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த எட்டு லேப்டாப்களை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர், அவர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து தனிப்படை போலீசார் 68 சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை பின் தொடர்ந்துள்ளனர். இறுதியாக அவர்கள் கண்ணகி நகர் பகுதியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. அதன் பின்னர், உடனடியாக இருவரையும் சுற்றி வளைத்து கைது செய்த போலீசார், காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது அவர்கள் இருவரும் கண்ணகி நகரைச் சேர்ந்த 28 வயதான ஜேக்கப், 27 வயதான அப்பு என்பது உறுதியானது. இவர்களில் ஜேக்கப் மீது ஏற்கனவே செம்மஞ்சேரி, கண்ணகி நகர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு, அடிதடி, வழிப்பறி என 09 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

அத்துடன், அப்பு மீதும் அடிதடி, திருட்டு வழக்குகள் உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் ஏற்கனவே திருட்டு வழக்கில் சிறைக்குச் சென்று கடந்த மூன்று நாட்களுக்கு முன்புதான் வெளியே வந்துள்ளனர். சிறையில் திட்டமிட்டபடி தாம்பரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்குச் சென்று லேப்டாப் திருடி மீண்டும் போலீசிடம் சிக்கியுள்ளனர்.

ஏற்கனவே அங்கு இரும்பு பைப்புகளை திருடியதை யாரும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். இதனால், அதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட இவர்கள் அலுவலகத்திற்குள் புகுந்து லேப்டாப்களை திருடியுள்ளனர். திருட்டு வழக்கில் கைதான போதும், இது தங்களுக்கு புதிது அல்ல என்பது போல் மீண்டும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.