அதிமுகவின் மதுரை மேற்கு தொகுதி வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே. ராஜு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, மகளிருக்கு 5,000 ரூபாய் வழங்கியது குறித்து முதல்வர் பேசக்கூடாது. 5,000 ரூபாய் அரசு கொடுக்கின்ற பணம். அதை தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் பேசக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், அதிமுக - பாஜக கூட்டணி குறித்து முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் செய்வது தேர்தல் தோல்வி பயத்தைக் காட்டுகிறதாகவும், அதிமுக - பாஜக கூட்டணி மக்கள் மத்தியில் நல்ல கூட்டணி எனவும், வெற்றி பெறும் கூட்டணி எனவும் உறுதியாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், அதிமுக - பாஜக கூட்டணியில் எந்தக் கட்சிகள் வந்துள்ளன மற்றும் எத்தனை கட்சிகள் வந்துள்ளன என மக்கள் பார்க்கவில்லை என்று குறிப்பிட்டதோடு, பாஜக அமைச்சரவையில் அங்கம் வகித்த போது திமுகவுக்குப் பாஜக இனித்ததா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக ஆட்சியில் இந்தியா வளர்ந்துள்ளதோடு, மோடி செல்வாக்குப் பெற்றவராக உள்ளார் என்று சுட்டிக்காட்டியுள்ளார். மத்திய அரசு குறித்து ஒரு ஊழல் புகார் கூட சொல்ல முடியாத அளவிற்கு பாஜக அரசு செயல்படுகிறது. பாஜக மதவாதக் கட்சி, தமிழ்நாட்டையே மாற்றிவிடும் என ஸ்டாலின் சும்மா பேசி வருகிறார் என்றும், தேர்தல் நெருங்குவதால் ஸ்டாலின் நகைச்சுவை செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சுந்தர்.சி-க்கு ஃபேஸ் வேல்யூ உள்ளது. அவரை நடிகர், இயக்குநர், குஷ்பூவின் கணவர் என்பதைவிட அவர் ஒரு வேட்பாளர். நடிகை குஷ்பூவுக்குக் கோவில் கட்டியது தமிழ்நாடு. ஆனால், தேர்தலில் குஷ்பூ தோல்வியடைந்து விட்டார். தவெக தலைவர் விஜய்க்கு, எம்.ஜி.ஆர். யாரென்பது தேர்தலுக்குப் பின்னர் தெரியவரும். எம்.ஜி.ஆர் என்பவர் எம்.ஜி.ஆர் தான் என்பது தம்பி விஜய் தேர்தலுக்குப் பின் அறிவார் என்று செய்தியாளர்களிடம் செல்லூர் கே. ராஜு தெரிவித்துள்ளார்.