ஐபிஎல் 2026 தொடரில் கௌஹாத்தியில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான மோதல், ஒரு 15 வயது சிறுவனின் அதிரடியால் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக களமிறங்கிய வைபவ் சூர்யவன்ஷி, சிஎஸ்கே பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்து வெறும் 15 பந்துகளில் அரைசதம் விளாசி சாதனை படைத்தார்.
5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் என வானவேடிக்கை காட்டிய அவரது ஆட்டத்தால், ராஜஸ்தான் அணி 12.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டி சிஎஸ்கே-வை வீழ்த்தியது. ஐபிஎல் வரலாற்றில் இது மூன்றாவது அதிவேக அரைசதமாகும். 15 வயதிலேயே ஜாம்பவான் பந்துவீச்சாளர்களை அச்சமின்றி எதிர்கொண்ட வைபவ்வின் தன்னம்பிக்கை கிரிக்கெட் உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
போட்டிக்குப் பிறகு துருவ் ஜூரல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோருடன் நடந்த கலகலப்பான உரையாடலில், வைபவ் தனது அதிரடிக்கு ஒரு சுவாரஸ்யமான காரணத்தைச் சொன்னார். “இன்று நான் ‘ராஜ்போக்’ இனிப்பைச் சாப்பிட்டுவிட்டுத் தான் மைதானத்திற்குள் இறங்கினேன்” என்று அவர் சொன்ன கமெண்ட் இப்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
வைபவ்வின் இந்த அசாத்திய திறமையைப் பார்த்த முன்னாள் ஜாம்பவான்கள் சஞ்சய் பங்கார் மற்றும் சபா கரீம் ஆகியோர் பாராட்டு மழையில் நனைத்து வருகின்றனர். இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ஒருபடி மேலே போய், “பிசிசிஐ உடனடியாக வைபவ்வை இந்திய அணியில் சேர்த்து இங்கிலாந்து தொடருக்கு அனுப்ப வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.