எங்க போனாலும் பஞ்சாயத்து!.. ஆன்லைன் மூலம் பிரச்சாரம் செய்ய விஜய் திட்டம்?..
WEBDUNIA TAMIL April 03, 2026 04:48 PM


தவெக தலைவர் விஜய் பிரபல நடிகராக இருந்து அரசியலுக்கு வந்திருப்பதால் அவர் எங்கு போனாலும் அவரை பார்க்க கூட்டம் கூடிவிடுகிறது. குறிப்பாக அவரை அருகில் பார்க்க இளைஞர்கள் பலரும் ஆசைப்படுகிறார்கள். அதனால்தான் கரூருக்கு அவர் சென்றிருந்தபோது 20 ஆயிரம் மக்கள் கூடி அசம்பாவிதம் ஏற்பட்டது.

தற்போது தவெக சட்டமன்ற தேர்தலை சந்திக்கவிருக்கும் நிலையில் விஜய் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய வேண்டியிருக்கிறது. ஆனால் அவர் எந்த தொகுதிக்கு பிரச்சாரம் செய்ய போனாலும் அங்கே போலீசாரால் கட்டுப்படுத்த முடியாதபடி கூட்டம் கூடி வருகிறது. இதனால் சில விபத்துக்கள் மற்றும் பெண்கள் வெயிலில் மயக்கமடைவது போன்ற சம்பவங்கள் நடக்கிறது..

ஒருபக்கம் இதன் காரணமாக போலீசார் விஜய் மற்றும் தவெக மீது வழக்கு பதிவு செய்கிறார்கள். விஜய் கொளத்தூருக்கு சென்றபோது போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படவில்லை. அதோடு, கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. எனவே, விஜய் பிரச்சாரம் செய்யமாலே அங்கிருந்து செல்லும் நிலை ஏற்பட்டது.

அதோடு விஜய பார்ப்பதற்காக வயதானவர்களும், நிறைய பெண்கள் குழந்தைகளை தூக்கிக் கொண்டும் வந்து விடுகிறார்கள். இதையெல்லாம் தவிர்ப்பதற்காக விஜய் ஆன்லைன் மூலம் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. தினமும் 20 நிமிடங்கள் வரை அவர் ஆன்லைனில் பேச முடிவெடுத்திருக்கிறார் எனவும், விஜய் ஆன்லைனில் பேசுவதை தவெக பிரச்சாரக் கூட்டங்களில் நேரடியாக ஒளிபரப்பும் ஏற்பாடுகளும் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது..

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.