நாகர்கோவில் அருகே புத்தேரி பகுதியில் 88 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் தனது இரண்டாவது மருமகளுடன் வசித்து வந்தார். மகன்கள் இருவரையும் இழந்த நிலையில், மருமகளும் மூதாட்டியும் அருகிலுள்ள கடைகளில் வேலை பார்த்து வந்துள்ளனர். சம்பவத்தன்று மூதாட்டி மட்டும் வீட்டில் தனியாக இருந்த சமயம் பார்த்து உள்ளே புகுந்த நபர், அவரது வாயில் துணியை வைத்து அமுக்கி கீழே தள்ளி கொடூரமாகப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
வேலை முடிந்து வீடு திரும்பிய மருமகள், மூதாட்டி மயங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அவரை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சுயநினைவு திரும்பிய மூதாட்டி தனக்கு நேர்ந்த கொடூரத்தைச் சொல்ல, ஒட்டுமொத்த நாகர்கோவிலும் அதிர்ச்சியில் உறைந்தது. இது குறித்து வடசேரி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அதில் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடிய ஒரு சிறுவனைப் பிடித்து விசாரணை செய்தபோது, அந்தச் சிறுவன் அதே பகுதியில் வசிக்கும் 9-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் என்பதும், மூதாட்டியைச் சீரழித்த வக்கிரக் கொடூரன் அவன்தான் என்பதும் அம்பலமானது. உடனடியாக அச்சிறுவன் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்த போலீசார், அவனைக் கைது செய்து நெல்லையில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.