சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ, பார்ப்போரை உறைய வைத்துள்ளது. ஒரு மாட்டுப் பண்ணையில் நான்கு பேர் அமைதியாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென உள்ளே புகுந்த தெருநாய் ஒன்று அங்கிருந்தவர்கள் மீது வெறித்தனமாகப் பாய்ந்து கடிக்கத் தொடங்கியது. நாற்காலியில் அமர்ந்திருந்தவரை முதலில் தாக்கிய அந்த நாய், அடுத்த நொடியே கட்டிலில் இருந்தவர் காலையும் கடித்துக் குதறியது.
அங்கிருந்தவர்கள் நாற்காலிகளைத் தூக்கிக்கொண்டு நாயை விரட்ட முயன்றனர், ஆனால் அந்த நாய் சற்றும் அஞ்சாமல் அடுத்தடுத்து அங்கிருந்த அனைவரையும் குறிவைத்துத் தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலின் போது ஒருவர் நிலைதடுமாறி மாடு கட்டும் தறியின் மீது விழுந்த நிலையில், அங்கிருந்த மற்றவர்கள் திரண்டு வந்து ஒருவழியாக நாயை விரட்டியடித்தனர்.
‘எக்ஸ்’ (X) தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, சில மணி நேரங்களிலேயே 3 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. தெருநாய்களின் அட்டகாசம் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என இந்த வீடியோ சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.