வாக்கு கேட்க புதிய ஸ்டைல்...! டீ ஊற்றி வாக்காளர்களை கவர்ந்த அ.தி.மு.க. வேட்பாளர் சாந்தி ராமு...!
Seithipunal Tamil April 05, 2026 11:48 PM

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில், தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க., நாம் தமிழர் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. வேட்புமனு தாக்கல் செய்துள்ள வேட்பாளர்கள் மக்கள் நடுவே சென்று நேரடி வாக்கு சேகரிப்பில் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக களமிறங்கியுள்ள சாந்தி ராமு, தனித்துவமான முறையில் வாக்காளர்களை அணுகி கவனம் ஈர்த்து வருகிறார்.

இந்த பிரசாரத்தின் ஒரு பகுதியாக, குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வரும் அவர், குன்னூரில் உள்ள முத்தாலம்மன் கோவிலில் வழிபாடு செய்து தனது பிரசாரத்தை தொடங்கினார்.

அப்போது அவருக்கு பாரம்பரிய மரியாதையாக பரிவட்டம் கட்டி, பூரண கும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து, சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொண்ட அவர், வழியிலேயே பொதுமக்களை சந்தித்து அவர்களுடன் உரையாடி ஆதரவு கோரினார்.

பின்னர், அப்பகுதியில் உள்ள ஒரு தேநீர் கடையில் நின்று, டீ குடித்தபடியே மக்களிடம் தன்னுக்கு வாக்கு அளிக்குமாறு கேட்டுக் கொண்டதுடன், கடைக்கு வந்த வாடிக்கையாளர்களுக்கு தானே டீ ஊற்றி வழங்கி, எளிமையான முறையில் ஆதரவை பெற்றுக்கொள்ள முயன்றார்.இந்த விதமான நேரடி மற்றும் நெருக்கமான பிரசாரம், மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.