பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த 7 பேர் பலி; 6 பேருக்கு கண்பார்வை பறிபோன சோகம்!
Seithipunal Tamil April 06, 2026 12:48 AM

பீகார் மாநிலத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் மதுவிலக்கு அமலில் இருந்தாலும், கள்ளச்சாராயச் சாவுகள் அங்குத் தொடர்கதையாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, கிழக்குச் சம்பாரண் (East Champaran) மாவட்டத்தின் மோதிஹாரி பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 7 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். மேலும், 6 பேர் தங்களின் கண்பார்வையை முழுமையாக இழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 3 மற்றும் 4, 2026 ஆகிய தேதிகளில் இந்தத் துயரம் அரங்கேறியுள்ளது.

மோதிஹாரியின் துர்காலியா மற்றும் ரகுநாத்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் சிலர், வெறும் 50 ரூபாய்க்கு விற்கப்பட்ட கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாங்கிப் பருகியுள்ளனர். அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு வாந்தி, மயக்கம் மற்றும் கண்பார்வை மங்குதல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் லால் கிஷோர் ராய், லட்டு சா, பரீக்ஷன் மாஞ்சி உள்ளிட்ட 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் ஒருவரான பரீக்ஷன் மாஞ்சியின் மகளுக்கு ஏப்ரல் 13-ஆம் தேதி திருமணம் நடக்கவிருந்த நிலையில், இந்தச் சம்பவம் அந்தத் திருமண வீட்டையே சுடுகாடாக மாற்றியுள்ளது.

தற்போது சுமார் 14 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இச்சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் சௌரப் ஜோர்வால் உத்தரவிட்டுள்ளார். முதற்கட்ட நடவடிக்கையாக, பணியில் கவனக்குறைவாக இருந்த துர்காலியா காவல் ஆய்வாளர் (SHO) உமாசங்கர் மாஞ்சி மற்றும் உள்ளூர் சவுக்கிதார் பாரத் ராய் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் கள்ளச்சாராய விநியோகத்தில் தொடர்புடைய 12 பேரைச் சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) கைது செய்துள்ளது. பீகாரில் மதுவிலக்கு சட்டம் பெயரளவில் மட்டுமே இருப்பதாக எதிர்க்கட்சிகள் நிதீஷ் குமார் அரசைக் கடுமையாகச் சாடி வருகின்றன.

அரசு எத்தனை தடைகள் விதித்தாலும், கள்ளச்சாராய வியாபாரிகளின் லாப வெறி அப்பாவி ஏழைகளின் உயிரோடு விளையாடுவதைத் தடுத்து நிறுத்த முடியவில்லை என்பதே கசப்பான உண்மையாக உள்ளது. மது இல்லாத மாநிலம் என்ற பெருமைக்கு நடுவே, இதுபோன்ற மரணங்கள் பீகாரின் நிர்வாகச் சீர்கேட்டைப் பறைசாற்றுகின்றன.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.