`மனைவிக்கு இரண்டு பாஸ்போர்ட்? அமெரிக்கா, துபாயில் சொத்து' - ஹிமந்தா பிஸ்வாவைச் சுற்றும் சர்ச்சை!
Vikatan April 06, 2026 11:48 PM

அஸ்ஸாம் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. ஏப்ரல் 9-ம் தேதி தேர்தலும் மே-4ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. அதைத் தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு, வேட்பு மனுதாக்கல் என தேர்தல் களம் பரபரப்பாக இயங்கி வருகிறது. இதற்கிடையில், அஸ்ஸாமின் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ், அஸ்ஸாம் முதல்வர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. காங்கிரஸ் தலைவர்கள் பவன் கேரா, கௌரவ் கோகோய் ஆகியோர் இணைந்து செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினர்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா

அதில், சில ஆவணங்களை வெளியிட்டு, ``அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் மனைவி ரினிகி புயன் சர்மா, இந்தியா தவிர ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் பாஸ்போர்ட் வைத்திருக்கிறார். முஸ்லிம்களுக்கு எதிரான அரசியலை முன்னெடுக்கும் ஹிமந்தாவின் மனைவி, எப்படி இரண்டு முஸ்லிம் நாடுகளின் பாஸ்போர்ட் வைத்திருக்கிறார்? அவருக்கு இரட்டைக் குடியுரிமை உள்ளதா? இந்தியச் சட்டப்படி ஒருவர் இரண்டு நாடுகளின் குடியுரிமை அல்லது பாஸ்போர்ட்டை வைத்திருக்க முடியாது.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சருக்குத் தெரியுமா? மேலும், ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் துபாய் மற்றும் அமெரிக்காவில் உள்ள தனது சொத்துக்களை மறைத்துவிட்டார்." எனக் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த விவகாரம் அஸ்ஸாமில் தீயாக பரவி பல்வேறு விவாதங்களும் தொடங்கியது. இந்த நிலையில், அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா காங்கிரஸின் குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கிறார்.

ஹிமந்த பிஸ்வா சர்மா

இது தொடர்பாக பேசிய ஹிமந்தா பிஸ்வா சர்மா, ``காங்கிரஸ் கட்சியினர் காட்டிய ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மற்றும் எகிப்து நாட்டு கடவுச்சீட்டுகள் (Passports) முற்றிலும் போலியானவை. அவை 'AI ஃபோட்டோஷாப்' தொழில்நுட்பம் மூலம் திருத்தப்பட்டவை. குறிப்பாக, 'திப்பு சுல்தான்' என்பவரால் பதிவேற்றப்பட்ட அசல் ஆவணங்களை எடுத்து, அதில் எனது மனைவியின் புகைப்படத்தை இணைத்து மோசடி செய்திருக்கின்றனர். துபாய் கடவுச்சீட்டு விவகாரத்தில், அது போலியானது என்பதை அந்த நாட்டு அரசாங்க இணையதளம் மற்றும் இந்திய அரசும் உறுதி செய்துள்ளது.

அதில் உள்ள புகைப்படங்கள் கூட எனது மனைவியுடையது அல்ல. எகிப்திய பாஸ்போர்ட் போலியானது என்பதை Google Reverse Search மூலம் எளிதாகக் கண்டறியலாம். இந்தக் குற்றச்சாட்டுகளுக்காக பவன் கேரா மீது ஐபிசி 420, 468 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பொதுமக்களின் கருத்தைத் தவறாக வழிநடத்தப் போலி ஆவணங்களைப் பயன்படுத்துவது கடுமையான குற்றம். தேர்தல் முடிவுகளைப் பாதிக்க இத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை வரை கிடைக்க வாய்ப்புள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து பாகிஸ்தானிய ஊடகங்கள் திட்டமிட்டு காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுகின்றன. கடந்த 10 நாட்களில் அஸ்ஸாம் தேர்தல் குறித்து அவர்கள் நடத்திய அனைத்து விவாதங்களும் காங்கிரஸை வெற்றிபெறச் செய்யும் நோக்கில் இருக்கிறது. நீதித்துறை மூலம் இதற்குத் தீர்வு காண்பேன்" எனத் தெரிவித்துள்ளார்.

Assam: `அஸ்ஸாமுக்கு SIR கிடையாது; NRC நடவடிக்கைதான் காரணம்' - தேர்தல் ஆணையம்
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.