மழையால் ரத்து செய்யப்பட்ட கொல்கத்தா - பஞ்சாப் போட்டி; இருஅணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள்..!
Seithipunal Tamil April 07, 2026 07:48 AM

இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 12 வது ஐபிஎல் 2026 லீக் ஆட்டம் கனமழை காரணமாக  ரத்து செய்யப்பட்டுள்ளது.

இன்று ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் அஜிங்கிய ரஹானே முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த நிலையில், அந்த அணி முதலில் களமிறங்கியது. ஆனால், தொடக்கமே முதலே கொல்கத்தா அணிக்கு அதிர்ச்சியாக அமைந்தது. பஞ்சாப் வேகப்பந்து வீச்சாளர் சேவியர் பார்ட்லெட் வீசிய இரண்டாவது ஓவரில், தொடக்க வீரர் ஃபின் ஆலன் (06) மற்றும் கேமரூன் கிரீன் (04) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர்.

கொல்கத்தா அணி 3.4 ஓவர்களில் 02 விக்கெட் இழப்பிற்கு 25 ரன்கள் எடுத்திருந்த போது மழை பெய்யத் தொடங்கியது. அப்போது கேப்டன் ரஹானே 08 ரன்களுடனும், அங்க்ரிஷ் ரகுவன்ஷி 07 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

மழை நின்ற பிறகு மைதானத்தைச் சீரமைக்க ஊழியர்கள் கடுமையாகப் போராடிய நிலையில், போட்டியை 05 ஓவர்கள் கொண்ட ஆட்டத்தை நடத்துவதற்கான கடைசி நேரமான 11:14 மணி வரை காத்திருந்தும், மைதானம் விளையாடத் தகுதியற்ற நிலையில் இருந்தது. இதன் காரணமாக இன்றைய போட்டி ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதன் மூலம் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் தனது உயர்த்தி முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த சீசனில் 02 போட்டிகளில் விளையாடிய கொல்கத்தா அணி இரண்டிலும் தோல்வியை தழுவிய நிலையில், இந்த போட்டி முக்கியமாக தனது முதல் வெற்றியைப் பதிவு செய்யவேண்டிய கட்டாயத்தில் இருந்த நிலையில், இந்தப் புள்ளி ஒரு சிறிய ஆறுதலாக அமைந்துள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.