வடகொரியாவின் இரும்புத்திரை மறைவில் இருந்து ஒரு புதிய வரலாறு எழுதப்பட்டு வருகிறது. தற்போதைய அதிபர் கிம் ஜாங் அன்னின் 13 வயது மகள், கிம் ஜூ ஏ, அந்நாட்டின் அடுத்த அரசியல் வாரிசாகத் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகத் தென் கொரியாவின் தேசிய உளவு அமைப்பு (NIS) அதிரடித் தகவலை வெளியிட்டுள்ளது. இது வெறும் யூகம் அல்ல, உறுதியான உளவுத் தகவல்களின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்ட உண்மை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். சமீபகாலமாக ராணுவப் பயிற்சிகளில் கலந்துகொண்டு ராணுவ டாங்கிகளை ஓட்டியும், துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டதுமே அவர் எதிர்காலத் தலைவராகத் தயார்படுத்தப்படுகிறார் என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது.
வடகொரிய அரசு ஊடகங்கள் அவரை ‘மதிப்பிற்குரிய மகள்’ என்றும், மிக உயர்ந்த தலைவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் ‘வழிகாட்டும் மாபெரும் நபர்’ என்ற பட்டத்தையும் சூட்டி கௌரவித்து வருகின்றன. வடகொரியாவின் தந்தைவழி மேலாதிக்கம் கொண்ட சமூக அமைப்பில், ஒரு பெண்ணை நாட்டின் உச்ச அதிகாரத்தில் அமர வைப்பதில் எவ்வித எதிர்ப்பும் கிளம்பக்கூடாது என்பதற்காகவே, இவ்வளவு இளம் வயதிலேயே அவர் மக்களிடையே பெரும் ஆளுமையாக அறிமுகப்படுத்தப்படுகிறார். கிம் ஜாங் அன் எடுத்துள்ள இந்த அதிரடி முடிவு, உலக நாடுகளின் பார்வையை வடகொரியாவின் பக்கம் திருப்பியுள்ளது.