ஈரான் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை இன்று மாலை 8 மணிக்குள் திறக்கவில்லையெனில் ஈரானில் உள்ள மின் உற்பத்தி மையங்கள்மீது தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். அதேசமயம் போர்நிறுத்தத்திற்கு அமெரிக்கா தெரிவித்த திட்டத்தை ஈரான் நிராகரித்ததோடு, போர்நிறுத்தம் செய்ய ஈரான் 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறது. இதனால் மத்திய கிழக்கில் இன்று மாலை கடுமையான தாக்குதல் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுப்படை ஈரானில் மின் உற்பத்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்தும் என்பதால் மின் கட்டமைப்புகள் அருகில் மனிதச் சங்கிலி அமைக்கும்படி இளைஞர்களிடம் ஈரான் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து ஈரான் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அலிரெசா ரஹிமி அளித்த பேட்டியில், ''இன்று பிற்பகல் 2 மணிக்கு முக்கிய மின் கட்டமைப்புகள் அருகில் விளையாட்டு வீரர்கள், தடகள வீரர்கள், மாணவர்கள் ஒன்று சேர வேண்டும். இளைஞர்களின் சொந்தப் பரிந்துரையின் பேரிலேயே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மின் நிலையங்களைச் சுற்றி ஒரு 'மனித வளையத்தையோ' அல்லது 'மனிதச் சங்கிலியையோ' அமைக்குமாறு, பல்கலைக்கழக இளைஞர்கள், இளம் கலைஞர்கள் மற்றும் இளைஞர் அமைப்புகள் என பலதரப்பிலிருந்து எங்களுக்குப் பரிந்துரைகள் வந்தன.
ஈரானிய இளைஞர்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கான மனிதச் சங்கிலி எனப்படும் இப்பிரச்சாரம், ஒற்றுமையையும் உறுதியையும் பிரதிபலிக்கும் நோக்கம் கொண்டது. நாடு முழுவதிலும் உள்ள இளைஞர்களின் பங்கேற்புடன், மின் நிலையங்களைச் சுற்றி இந்த மனிதச் சங்கிலி உருவாகும். நாட்டின் உள்கட்டமைப்பைப் பாதுகாப்பதிலும், ஒரு பொன்னான எதிர்காலத்தை உருவாக்குவதிலும் இளைஞர்களுக்குள்ள அர்ப்பணிப்பின் அடையாளமாக இது விளங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று ரஹிமி கூறினார்.
ட்ரம்ப் அளித்துள்ள பேட்டியில், ``இன்று மாலை 8 மணிக்குத் தாக்குதலைத் தொடங்கி 12 மணிக்குள் அதாவது 4 மணி நேரத்தில் மின் உற்பத்தி மையங்களை முற்றிலுமாக அழிப்போம் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார். தெஹ்ரானில் உள்ள செயற்கை நுண்ணறிவுத் திறன்களுடன் தொடர்புடைய கட்டமைப்புகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகத்தில் அமைந்துள்ள ஒரு முக்கிய அமெரிக்க செயற்கை நுண்ணறிவுத் தரவு மையத்தை தாக்கப்போவதாக ஈரான் சூசகமாகத் தெரிவித்துள்ளது.