காங்கிரஸ், திமுக ஆகிய இரு கட்சிகளும் பாஜகவுடன் சமரசம் செய்துள்ளன எனும் மம்தாவின் கருத்துக்கு எம்.பி.ஜோதிமணி பதிலடி கொடுத்துள்ளார். இந்த தேசம் உங்களை மன்னிக்காது என்றும் அவர் சாடியுள்ளார்.
’’இந்தியாவின் ஒரு மூத்த அரசியல்வாதி, மூன்று முறை மேற்கு வங்கத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி இப்படிக் கொஞ்சமும் பொறுப்பில்லாமல், உண்மைக்குப் புறம்பாக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், திமுக கட்சிகள், பாஜகவோடு ரகசிய உடன்பாடு வைத்துள்ளன என்று பேசுவது அபத்தமானது மட்டுமல்ல கடுமையான கண்டனத்திற்குரியது.
தமிழ்நாட்டில் நாங்கள் பாஜகவிற்கு எதிராக ஒவ்வொரு தினமும் யுத்தம் நடத்திக் கொண்டுள்ளோம். எமது மொழி, இனம், பண்பாடு, வளர்ச்சி அனைத்திற்கும் எதிராக உள்ள பாஜகவை இந்தத் தேர்தலில் தோற்கடிப்பதே எங்கள் இலக்கு. அஇஅதிமுக முகமூடி அணிந்து கூட பாஜக தமிழ்நாட்டில் கால்பதித்து விடக்கூடாது என்பதில் எமது தமிழினம் உறுதியோடு உள்ளது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அச்சமற்று அயராது மோடி அரசிற்கும், பாஜகவிற்கும் எதிராக சமரசமற்ற போராட்டத்தை நடத்திவருகிறார். தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக முதலமைச்சர் திமுகவின் தலைவர் மு.க. ஸ்டாலின், பாஜகவோடு சமரசமற்று போராடி வருகிறார்.
தேசிய அளவில் நாடாளுமன்றத்தில் நாங்கள் பாஜக அரசை எதிர்த்து நடத்தும் போராட்டத்தில் திமுக எப்பொழுதும் எங்கள் பக்கம் நிற்கிறது. ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் பல நேரங்களில் அப்படிச் செயவதில்லை. ஆனாலும் உங்கள் மீது எந்த அவதூறுகளையும் நாங்கள் பரப்பியதில்லை. ஏனென்றால் பாஜகவிற்கு எதிரான யுத்தத்தில், நாட்டின் நலன்கருதி எதிர்க் கட்சிகள் ஒன்றாகவே பயணிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நீங்களும் அந்த நிலைப்பாட்டிலேயே நில்லுங்கள். அதுதான் மேற்குவங்கத்திற்கும், இந்தியாவிற்கும் நல்லது.
நீங்கள் 15 ஆண்டுகாலம் செய்த சாதனைகளைச் சொல்லி வாக்குக் கேளுங்கள். மக்கள் உங்கள் பக்கம் நிற்பார்கள். கூட்டணிக் கட்சிகளை அவதூறு செய்வதன் மூலம் நீங்கள் அடையக்கூடியது ஒன்றும் இல்லை. தமிழ்நாட்டில் மட்டுமல்ல கேரளம், புதுச்சேரி, அஸ்ஸாம், மேற்குவங்கம் உள்ளிட்ட எந்த மாநிலத்திலும் பாஜக வெல்லக் கூடாது என்பதே எமது நிலைப்பாடு.
அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடித்து, இந்தியாவைப் பாதுகாக்க ராகுல் காந்தி தலைமையேற்று நடத்தும் போராட்டத்தில் நீங்கள் பங்கேற்காவிட்டாலும் பரவாயில்லை. பலவீனப்படுத்த முயற்சி செய்யாதீர்கள். இந்த தேசம் உங்களை மன்னிக்காது’’ என்று ஜோதிமணி எம்.பி. தெரிவித்துள்ளார்.