பிஸ்கெட்,மிட்டாய் ஆசை காட்டி வாக்கு கேட்கப்பட்டதா...? சிறுவர்கள் மூலம் பிரசாரம்....! - வேட்பாளர் மீது வழக்கு
Seithipunal Tamil April 07, 2026 10:48 PM

வருகிற 23ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. இந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனித்து களம் இறங்கி, வேட்பாளர்கள் வீதியிலிருந்து வீதிக்கு சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகிலுள்ள சாத்திப்பட்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் மணிகண்டன், சிறுவர்களுக்கு மிட்டாய் மற்றும் பிஸ்கெட் வழங்கி, தனது விசில் சின்னத்திற்கு ஆதரவு திரட்ட அவர்களை பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்வது, கொடி மற்றும் தோரணங்கள் கட்டுவது போன்ற பணிகளிலும் சிறுவர்கள் ஈடுபடுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து, அதே பகுதியை சேர்ந்த அருண்குமார் மனைவி தென்றல் (32), தனது மகன் உள்ளிட்ட சில சிறுவர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், இதில் கிராம நிர்வாக அலுவலர் அரவிந்தன் உதவி செய்ததாகவும் குற்றம்சாட்டி காடாம்புலியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்தச்சம்பவத்தைத் தொடர்ந்து, மணிகண்டன் மற்றும் அரவிந்தன் மீது காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.