பும்ராவையே ஆட்டிப் படைத்த 15 வயது சிறுவன்…! முதல் பந்தே சிக்சர் தான்.. ஒட்டுமொத்த ரசிகர்களும் எதிர்பார்த்த அந்த ஒரு நொடி… தெறிக்கவிட்ட சம்பவம்… கலக்கல் வீடியோ..!!
SeithiSolai Tamil April 08, 2026 01:48 PM

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 13-வது லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 27 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. மழையால் பாதிக்கப்பட்ட இப்போட்டியில், 15 வயதே ஆன இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, உலகின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சை சிதறடித்தது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று இரவு நடைபெற்ற இந்தப் போட்டி, பலத்த மழை காரணமாகத் தாமதமாகத் தொடங்கியது. இதனால் ஆட்டம் தலா 11 ஓவர்கள் கொண்டதாகக் குறைக்கப்பட்டது.

இப்போட்டியில் அனைவரின் கவனமும் ராஜஸ்தான் அணியின் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மீது இருந்தது. குறிப்பாக, உலகின் ‘நம்பர் 1’ பந்துவீச்சாளரான பும்ராவை அவர் எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

ஆனால், களமிறங்கிய சூர்யவன்ஷி எவ்வித பயமுமின்றி பும்ரா வீசிய முதல் பந்தையே லாங்-ஆன் திசையில் இமாலய சிக்சராக மாற்றினார். அவரது துணிச்சலான ஆட்டத்தைக் கண்டு திகைத்துப் போன பும்ரா, ஒரு மெல்லிய புன்னகையுடன் பந்துவீசத் திரும்பினார். அந்த ஓவரில் மட்டும் சூர்யவன்ஷி இரண்டு சிக்சர்களைப் பறக்கவிட்டார்.

தொடர்ந்து அதிரடி காட்டிய சூர்யவன்ஷி, மொத்தம் 14 பந்துகளில் 39 ரன்கள் (1 பவுண்டரி, 5 சிக்சர்கள்) குவித்து ஆட்டமிழந்தார். ஷர்துல் தாக்கூர் வீசிய பந்தில் எல்லைக்கோடு அருகே அவர் கேட்ச் ஆனார். சூர்யவன்ஷி பும்ராவிற்கு சிக்சர் அடித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் இதனை மீம்ஸ்கள் மூலம் கொண்டாடி வருகின்றனர்

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.