தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வரும் 23ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. அதன்பின்னர் 10 நாட்கள் கழித்து மே 04-ஆம் தேதி, வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இதனை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, தவெக தலைவர் விஜய் இன்று நெல்லையில் தனது பிரசாரத்தை மேற்கொண்டார். இதில், விஜய் வாகனத்தை பின் தொடர்ந்து இளைஞர்கள் சென்றபோது விபத்துக்கள் ஏற்பட்டு 16 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், நாளை கடலூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொள்ள காவல்துறையிடம் தவெக அனுமதி கோரியது. இதற்கு அனுமதி கொடுத்த காவல்துறை அனுமதிக்கப்பட்ட இடத்தில் பிரசாரம் மேற்கொள்ளலாம் என்றும், ரோடு ஷோ நடத்தக்கூடாது என்றும் தெரிவித்து அனுமதி அளித்தது.
இந்நிலையில், நாளைய கடலூர் பிரசாரத்தை தவெக தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. அத்துடன், வரும் 11ஆம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு விஜய் வருகை தந்து பிரசாரம் மேற்கொள்வார் என கூறப்படுகிறது.