தமிழகத்திலேயே அதிகம்.. 73 வேட்பாளர்கள் களம் காணும் “ஹாட்” தொகுதி எது தெரியுமா?
TV9 Tamil News April 10, 2026 12:48 AM

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 13 நாட்களே உள்ளன. இந்த தேர்தலில் 234 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் ஆகியோர் தங்களது வேட்பு மனுக்களை கடந்த மார்ச் 30- ஆம் தேதி முதல் ஏப்ரல் 6- ஆம் தேதி வரை தாக்கல் செய்து வந்தனர். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை கடந்த ஏப்ரல் 7- ஆம் தேதி நடந்து முடிந்தது. இதைத் தொடர்ந்து, இன்று வியாழக்கிழமை ( ஏப்ரல் 9) வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாளாகும். அதன்படி, பிற்பகல் 3 மணியுடன் வேட்பு மனுக்கள் திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் நிறைவடைந்தது. அத்துடன், மாலையில் வேட்பாளர் இறுதிப் பட்டியலும் இன்று வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியாக கரூர் சட்டமன்ற தொகுதி முதல் இடம் பிடித்துள்ளது. இந்த சட்டமன்ற தொகுதியில், அதிமுக, திமுக, காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம் ஆகிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் என 79 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதியில் போட்டியிடுவதற்காக சுமார் 83 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

வேட்பு மனுக்களை திரும்ப பெற்ற 4 வேட்பாளர்கள்

இதில், 4 வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். இதன் மூலம், தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வேட்பாளர் இறுதி பட்டியலின் அடிப்படையில், 79 அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதிக்கு அடுத்தபடியாக, பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் 47 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதே போல, கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் 44 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

மேலும் படிக்க: விஜய்யுடன் இருப்பது எந்த காங்கிரஸ் கட்சி தெரியுமா… கர்நாடக துணை முதல்வர் வைத்த ட்விஸ்ட்!

குறைந்தபட்ச வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி

மேலும், கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் 43 வேட்பாளர்கள் மற்றும் பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதியில் 43 வேட்பாளர்கள், ஆர். கே. நகர் சட்டமன்ற தொகுதியில் 40 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தமிழகத்திலேயே அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியாக முதலிடத்தில் கரூர் சட்டமன்ற தொகுதி இடம் பெற்றுள்ள நிலையில், குறைந்தபட்சமாக 5 வேட்பாளர்கள் போட்டியிடக்கூடிய சட்டமன்ற தொகுதியாக திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி இடம் பெற்றுள்ளது.

கடினமாகும் கரூர் தொகுதி தேர்தல் களம்

இதே போல, கடந்த சட்டமன்ற தேர்தல் மற்றும் கடந்த மக்களவைத் தேர்தலில் கரூர் மாவட்டத்தில் அதிக வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அப்போது, அதிக வேட்பாளர்கள் போட்டியிட்டது போல தற்போதும் கரூர் தொகுதியில் அதிக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதனால், வரும் சட்டமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் கடுமையான போட்டி நிலவும் என்றும், தேர்தல் களம் சற்று கடினமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க: தமிழகத்தில் குறைவான வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி.. “சிங்கிள் டிஜிட்” மோதல்… எத்தனை பேர் தெரியுமா!

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.